கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கையை முதல் முறையாக வெளியிட்ட ரஷ்யா!
உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணிக்கையை முதல் முறையாக ரஷ்யா வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது 8-வது நாளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக அச்சப்படுகிறது.
இதேவேளை, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை ரஷ்யா நடத்தி வரும் நிலையில் உலக நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனுடனான போரில் தங்கள் தரப்பில் கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை ரஷ்யா முதல் முறையாக வெளியிட்டுள்ளது.
ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,
உக்ரைனுடனான போரில் ரஷ்ய வீரர்கள் 498 பேர் கொல்லப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போரில் 1,597 வீரர்கள் காயமடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
போரில் உக்ரைன் வீரர்கள் 2 ஆயிரத்து 870 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷியா தெரிவித்துள்ளது.
அதேவேளை, ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ரஷ்யாவுடனான மோதலில் தங்கள் தரப்பில் எத்தனை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலை உக்ரைன் அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.