உக்ரைனின் கடுமையான பதிலடி: தங்களை பாதுகாத்து கொள்ள ரஷ்ய படைகள் செய்த செயல்!
உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து 15 முதல் 20 கிலோ மீட்டர் தொலைவில் பதுங்கு குழிகளை ரஷ்ய துருப்புகள் அமைத்துள்ளனர் என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “கிவ் நகரை ரஷ்ய துருப்புகளால் முன்னேற முடியவில்லை. கீவ்வின் கிழக்கு பகுதியில் ரஷ்ய துருப்புகள் பின்வாங்கி உள்ளன. கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தன.
தற்போது 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரஷ்ய துருப்புகள் சென்றுவிட்டன. ரஷ்ய துருப்புகள் தங்களை பாதுகாத்து கொள்ள கிவ் புறநகர் பகுதிகளில் பதுங்கு குழிகளை அமைத்துள்ளனர்” என்றார்.
உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதால் ரஷ்யா, தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனில் அனைத்து நகரங்களிலும் மீண்டும் கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகிறது.
கார்கிவ், மரியுபோல், மெலடோபோல் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து தாக்குதலை நடத்துகிறது. பெரும்பாலான நகரங்களில் கட்டிடங்கள், உள் கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ள போதிலும் உக்ரைன் ராணுவத்தினரின் செயல்பாட்டை முடக்க ஏவுகணை தாக்குதல் தொடர்கிறது.
உருக்குலைந்து காணப்படும் மரியுபோல் நகரில் இன்னும் 1 லட்சம் மக்கள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நகருககுள் நுழைந்துள்ள ரஷ்ய துருப்புகள் முக்கிய பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதே போல் மெலடோபோல் நகரில் உள்ள விமான படை தளத்தில் ரஷியாவின் ராணுவ தளம் அமைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ராணுவத்தினர் சில பகுதிகளை மீட்டுள்ளதால் ரஷ்ய துருப்புகள், அனைத்து நகரங்களிலும் தாக்குதலை அதிகப்படுத்தி உள்ளது.