ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற முருகன் ஆலய நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்! பக்தர்கள் கவலை
ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான அம்பாறை மாவட்டத்தில் உள்ள உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அமைக்கப்பட்டு வந்த 18 அடி உயரமான முருகன் சிலை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சிலை நிர்மாணப் பணிகளை வன ஜீவராசிகள் திணைக்களம் இந்த தடை உத்தரவை பிறப்பித்து இருப்பதாக ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார். அத்திவாரம் அமைக்கப்பட்டு பீடம் எழுப்பப்பட்ட நிலையில் இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முருகன் சிலை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்ட சம்பவமானது, இந்துக்களின் மனங்களை புண்படச்செய்துள்ளன.
சம்பவத்தை கேள்வியுற்ற பிரபல சமூக செயற்பாட்டாளரும், காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஸ்தலத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க வைச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க கூறுகையில்,
கடந்த ஏப்ரல் மாதமளவில் வள்ளிஅம்மன் மலையில் வள்ளியம்மன் ஆலயத்திற்கு பின்னால் 18 அடி உயரமான முருகன் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பமானது.
இருந்த போதிலும் ஜூலை மாதமளவில் பணியை நிறுத்துமாறு வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்தது. நிர்மாண பணிகளுக்காக ஆரம்பத்தில் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அனுமதி பெறப்பட்ட நிலையில் தற்போது கொழும்பு தலைமையகத்தில் இருந்து இத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்பில் தவிசாளர் ஜெயசிறில் கூறுகையில்,
இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முற்பட்ட உகந்தைமலை முருகன் ஆலயம் மலைகளாலும் மரங்களாலும் சூழப்பட்ட ஒரு பழமையான ஆலயம் அகும் . ஆலய வளாகத்தில் உள்ள வள்ளியம்மன் மலையில் முருகன் சிலை அமைக்கப்பட்டு வந்தது .என்ன காரணத்துக்காக இது நிறுத்தப்பட்டதோ தெரியாது.
ஆனால் ,இந்த செயல் முழு இந்துக்களின் மனங்களையும் புண்பட செய்திருக்கின்றது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக விரைவாக அனுமதியை வழங்கி இந்த செயற்பாட்டை முன் எடுத்துச் செல்ல உதவும் வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அண்மையிலே இந்தியாவில் ராஜஸ்தானிலே 368 அடி உயரமான உலகின் மிகப்பெரிய சிவன் சிலையை அமைத்து அழகு பார்த்தார்கள். எமது நாட்டிலும் உன்னஸ்கிரிய தொடக்கம் நாட்டின் பல பாகங்களிலும் மிக உயர்ந்த புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன .
ஆனால், இங்கு ஆலய வளாகத்துக்குள் ,அதுவும் ஆலயமருகே எழுப்பப்பட்ட இந்த சிலை நிர்மாணம் நிறுத்தப்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனவும் அவர் கூறினார் .
அதேசமயம் பல அரசியல்வாதிகள் சந்தித்ததாக வண்ணக்கர் கூறியதுடன், அவர்களது முயற்சியும் எனது முயற்சியும் சேர்ந்து நல்லதொரு தீர்வை பெற நடவடிக்கையை மேற்கொள்வோம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.