தலிபான்களின் கொடுங்கோல் ஆட்சி; பெற்றோரை இழந்த ஆப்கான் குழந்தைகள்; அடைக்கலம் கொடுத்த பிரபல நாடு!
ஆப்கானிஸ்தானின் ஆட்சி தாலிபான் வசம் சென்றது முதல் அங்குள்ள பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு விதமான தடைகளை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், பெற்றோர்களை இழந்த 10 ஆப்கான் குழந்தைகள் ஆப்கான்-ஆஸ்திரேலியரான மக்பூபா ராவி உதவியுடன் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையிலான மலைப்பிரதேசங்கள் நிரம்பிய எல்லைப் பகுதியை கடந்து பாகிஸ்தானுக்குள் சென்ற குழந்தைகள், காப்பக பணியாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என 17 பேர் துபாய் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவை அடைதுள்ளனர்.
இந்நிலையில், தாலிபானின் அச்சுறுத்தலில் இருந்து தப்பியது குறித்து குழந்தைகள் பெரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அதே சமயம், தங்களைப் போலவே பெற்றோர்களை இழந்த தனது நண்பர்கள், சகோதர, சகோதரிகள் ஆப்கானில் சிக்கியிருப்பது தொடர்பில் அவர்கள் கவலையாக உள்ளதாக குழந்தைகள் காப்பக பணியாளர் காலித் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பனிக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு உள்ள 1.4 கோடி மக்கள் போதிய உணவின்றி தவிக்கும் சூழல் உள்ளதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
அதாவது 5 சதவீத ஆப்கான் குடும்பங்கள் மட்டுமே போதுமான உணவைக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கணக்குப்படி, 10 லட்சம் ஆப்கான் குழந்தைகள் பட்டினியால் வாடும் நிலைமை உள்ளதாகவும் அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
