இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து ; 25 பேர் காயம்
ஹம்பாந்தோட்டை - மாத்தறை பிரதான வீதியின் பல்லேமலல பகுதியில் புதன்கிழமை (18) பிற்பகல் 1 மணியளவில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றும், தனியார் பேருந்தொன்றும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் மூன்று வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்குவதாக தெரிவித்த பொலிஸார், அவர்களில் இருவர் பெண்கள் என தெரிவித்தனர்.
தெஹியத்தக்கண்டியிலிருந்து காலி நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து, தனக்கு முன்னால் திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது விபத்து எற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இ.போ.ச பேருந்து தனியார் பேருந்தின் பின்பக்கத்தில் மோதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் இடதுபுறத்திலிருந்த வர்த்தக நிலையத்தின் மதிலை உடைத்துக் கொண்டு சென்று நின்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.