விமான தளங்களைப் பயன்படுத்த கூடாது ; அமெரிக்காவை எதிர்த்த நாட்டிற்கு ட்ரம்ப் செய்த சம்பவம்
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அமெரிக்க படைத்தளங்கள் சேதங்களை சந்தித்துள்ளன.

போர் விமானங்கள்
அமெரிக்கா தனது போர் விமானங்களை ஸ்பெயினின் ரோட்டா மற்றும் மோரோன் ராணுவ தளங்களில் நிறுத்தி வைத்திருந்தது. இந்தப் போர் விமானங்களை கொண்டு ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டது.
இதற்கு தங்களின் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு ஸ்பெயின் அனுமதி மறுத்தது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு தங்கள் ராணுவத் தளவாடங்களைப் பயன்படுத்துவதற்கும் ஸ்பெயின் அரசு மறுத்துவிட்டது.
இதனால் அமெரிக்கா-ஸ்பெயின் இடையேயான வர்த்தகத்தை முற்றிலும் துண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "ஈரானுக்கு எதிரான போரில் ராணுவ உதவிகளை செய்ய ஸ்பெயின் மறுத்துவிட்டது. ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்துக் கொள்கிறோம்.
இனி ஸ்பெயினுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. இப்போது ஸ்பெயின் அவர்களின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த முடியாது என்று கூறிவிட்டது. நாங்கள் விரும்பினால் அவற்றைப் பயன்படுத்துவோம். நாங்கள் அங்கு பறந்து செல்வோம். யாரும் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது" என்றார்.