தமிழர் பகுதியில் பொக்கிக்ஷமாக பாதுகாக்கப்படவேண்டிய திருகோணமலை எல்லைக் காளி அம்மன் கோயில்

trinco malee kali amman temple
By Krishna Feb 04, 2021 07:41 PM GMT
Report

திருக்கோணமலை புராதன காலம் தொட்டு இன்றுவரை தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தால் எல்லோரையும் கவருகின்ற ஒரு நகராகும்.

வங்கக்கடலை நோக்கிய “ஆ” என விரிந்த குடாவோடு, நிலத்தின் அருகிலேயே கப்பல்கள் தரிக்கக்கூடிய ஆழத்தோடு திகழும் இந்த இயற்கைத் துறைமுகம் காலம் காலமாக கடலோடிகளை கவர்ந்தே வந்துள்ளது.

இதனாலேயே திருக்கோணமலை அக்கால இணையற்ற தமிழ்ப்பேரரசனான இராஜராஜ சோழனது கடாரம், சொர்ணத்தீவு ( இன்றைய இந்தோனேசியா, பாலித்தீவுகள், சுமத்திரா ) போன்ற நாடுகளுக்கான படையெடுப்பிற்கான பிரதான துறைமுகமாகவும், பிற்காலத்தில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியரின் காலனித்துவ கனவுகளுக்கு பிரதான திறவுகோலாகவும், இக்கால அமெரிக்கா முதல் இந்தியா வரையான நாடுகளின் தீராத காதலினால் ஏற்பட்ட பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு அடித்தளமாகவும் விளங்கிவருகின்றது.

மேற்கூறிய காரணங்களால் அன்று முதல் இன்று வரை பல்வேறுபட்ட இனத்தவர்கள், மதத்தவர்கள் கலந்து வாழும் ஓர் இடமாகவும், பல்வேறுபட்ட தொழில் முயற்சிகள், வர்த்தக நடவடிக்கைகள் நடைபெற்று வரும் பிரதான வர்த்தக நகரமாகவும், பல்வேறுபட்ட நாகரீக மாற்றங்களுக்கு முகம் கொடுத்து கணிசமான சனத்தொகை உள்வரவுகள், வெளியேற்றங்கள், குடியேற்றங்கள் நடைபெற்ற போதும்கூட தனக்கென தனியான சில கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை உறுதியாகப் பேணி வருகின்றது என்பது அதிசயமே.

இதற்குப் பிரதானகாரணம் மனிதரின் ஏற்பாடுகளினால் அமைகின்ற எந்த அரசாங்கம் ஆண்டாலும் அவைகளின் நடுவே கடலலை தாலாட்டும் கோணமலைக்குன்றின் மீதமர்ந்து தனியாட்சி நடத்துகின்ற மாதுமையம்பாள் சமேத திருக்கோணேஸ்வரப் பெருமானின் திருவருட்கடாட்சமே என்றால் மிகையாகாது.

சக்தி வழிபாடும் திருக்கோணமலையும்

தெட்சண கைலாயம் என்றும் சிவபூமி என்றும் விளிக்கப்பட்டும் இன்றும் அதிகளவில் சிவன் கோயில்களை கொண்ட மாவட்டமாகவும், தேவாரப் பாடல்பெற்ற திருக்கோணேஸ்வரத்தாலும், சனீஸ்வரனுக்கு தனிக்கோயில் உள்ளமையால் அடிக்கொரு சிவலிங்கம் இருந்திருக்க வேண்டும் என்று ஆன்றோர்களால் ஊகிக்கப்பட்டும், சிவவழிபாடே பிரதானமாக இருந்தபோதும் கூட சைவத்தின் ஏனைய உட்பிரிவுகளான இதர தெய்வங்களின் வழிபாடுகளுக்கும் திருக்கோணமலையில் குறைவில்லை.

இது குறிப்பாக பெண்தெய்வ வழிபாடு, சக்தி வழிபாடு அதிகளவில் இடம்பெறும் ஒரு இடமாகும். ஆகம முறை சார்ந்த அம்மன் கோயில்களும், ஆகம முறைசாராத கிராமிய வழிபாட்டு முறைகளாலும் அம்பிகை அதிகளவில் வணங்கப்படுகின்றாள்.

திருக்கோணமலை நகரத்திலுள்ள பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் புகழ் திருக்கோணமலை அன்பர்களால் அம்பிகை எவ்வளவு உயர்த்திப் போற்றப்படுகின்றாள் என்பதற்கு அத்தாட்சியாகும்.

தவிர ஆகம முறையும் வேள்விமுறையும் கலந்த ஆலயங்களான பாலம் போட்டாறு பத்தினி அம்மன், சல்லியம்மன் திருவிழாக்களில் அலைகடல் போல திரளும் அடியார் கூட்டம் இம்மாவட்டத்தின் சக்தி வழிபாட்டின் சிறப்பை வழிமொழியும் இன்னொறு சான்றாகும்.

அதுமட்டமன்றி நவராத்திரி கடைசி நாளன்று சிறப்பாக நடைபெறும் கும்பம், காவடி, கரகம் திருவிழாக்கள் இலங்கையின் வேறு பிரதேசங்களில் காணமுடியாத திருக்கோணமலைக்கே உரிய தனித்துவமான சக்தி வழிபாட்டு முறையாகும்.

இவற்றைத்தவிர திருக்கோணேஸ்வரத்தின் எல்லைகளை பாதுகாப்பதற்காக திருக்கோணமலை மாவட்டத்தின் எல்லைகள் தோறும் எட்டுத் திசைகளிலும் புகழ்பெற்ற எல்லைக் காளிகள் காவல் தெய்வங்களாக வீற்றிருந்து கருணை மழை பொழிகின்றனர்.

திருக்கோணமலையின் வடக்கு எல்லையின் பண்டைய ஸ்ரீபதிக் கிராமத்திலுள்ள காளி (தற்கோதைய பதவி ஸ்ரீபுர) பன்குளம், நல்லகுட்டியாற்றை அண்மித்த பறையன்குளத்தில் வீற்றிருக்கும் எல்லைக்காளி, முறையே சம்பூர் பதியுறை பத்திரகாளி, கட்டைபறிச்சான் அம்மச்சி அம்மன், ஈச்சிலம்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கைத்துறை முகத்துவாரத்திலுள்ள செம்பொன்னாச்சி அம்மன், மூதூர் கடற்கரைச்சேனையிலிருந்து இடம்மாறி தம்பலகாமம் பகுதியிலுள்ள சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில் தற்போது எழுந்தருளுகின்ற பத்திரகாளியம்மனும் கங்குவேலி நீலாப்பளையம்மன் ஆகியோர் திருக்கோணேஸ்வரத்தின் எல்லைகளை பாதுகாக்கும் பணியினை செய்கின்றனர்.

இதில் நீலாப்பளை அம்மனின் புராதன விக்கிரகம் மண்ணில் புதையுண்டு இருந்தாலும் அம்பிகையின் அற்புதங்களும், அருளும் குறையவில்லை. எல்லா சிலையமைப்பிலும் காளிதேவி உக்கிர ரூபியாக, படைக்கலங்களை தாங்கி விரித்த சிகையுடன் போர்க்கோலமேற்று மறக்கருணை பொழிந்து உண்மையிலேயே தீயதை அழிக்கும் காவற் தெய்வமாகவே அருளுகின்றாள்.

இதே சிலையமைப்பை ஒத்த ஒரு சிலை அம்பாறை மாவட்ட வீரமுனை கிராமத்தில் உள்ளதனால் திருக்கோணேஸ்வரத்தின் பரிபாலன அதிகார எல்லைகள் தெற்கே பாணமைவரையும், வடக்கே வன்னிமை வரையும் நீண்டு விரிந்து பரந்து இருந்துள்ளதற்கு சான்று பகர்கின்றது.

அத்தோடு, திருக்கோணமலை நகர மத்தியில் வீற்றிருக்கும் புகழ்பெற்ற பத்திரகாளி அம்பாள், திருக்கோணேஸ்வரத்தின் நகர காவற்காளியாகும்.

ஒரு தொல்பொருள் ஆராச்சியாளனின் பார்வையிலோ, அல்லது ஒரு சிற்பாசாஸ்திர வல்லுனராலோ இவ்விக்கிரகங்களை அலசி ஆராய்ந்து அளவெடுத்து இந்த காலகட்டத்திறகுரியது என்றோ அல்லது இவ்வாறான சிற்பசாஸ்திர விதியை பின்பற்றி இக்கலைவடிவம் வடிக்கப்பட்டுள்ளது என்றோ விஞ்ஞான பூர்வமாக கூறமுடியும்.

இது புறக்கண்ணாலான அளவீடாகும். காளி என்ற சொல்லின் பொருள் காலத்தைக் கடந்தவள். ஆனால் அகக்கண்ணால் பக்தியுடன் நோக்கும் அடியார்களுக்கு அன்னை அநாதியானவள் அவள் அருளும் அநாதியானது. இருந்த போதும் இச் சில விக்கிரகங்களது அமைப்பு முறை சோழர்காலம் அல்லது சோழர்காலத்திற்கு முற்பட்டது என்பது ஆராச்சியாளர்களின் கருத்தாகும்.

பன்குளம் பறையன்குளம் எல்லைக் காளி – அன்று

முன்பு கூறப்பட்ட சிலைவார்ப்பும், ஆலய சூழலில் காணப்படும் கருங்கற் சிதைவுகளும் புராதன காலத்தில் இப்பிரதேசம் தமிழ் சைவம் தழைத்தோங்கிய இடமாக விளங்கியது என்பதற்கு சான்று பகருகின்றது.

சோழ சாம்ராஜ்ஜியத்தின் அஸ்தமனத்துடன் ஈழவழ நாட்டில் சிங்கள ராஜதானிகளின் எழுச்சியுடன் இந்த கோயில்களின் வழிபாடுகளில் தடையேற்பட்டிருக்கலாம் அல்லது குடிப்பெயர்வுகளால் ஆதரிக்கும் அயலவர் இன்றி அம்பாள் மறைந்தருளியிருக்கலாம்.

எல்லாமே ஊகங்கள் தான் எல்லைக் காளியின் தோற்றம் பற்றியறிய போதிய சான்றுகள் என் அறிவுக்கும் தேடல் முயற்சிகளுக்கும் புலப்படவில்லை. எல்லைக் காளி நினைத்தால்தான் தோற்றம் வெளிக்கும். அதைத்தொடர்ந்து அன்னியராட்சியில் நிலவிய பிற மதங்களுக்கான கட்டுப்பாடு மதமாற்றங்களால் மறைந்தே அருள் புரிந்து வந்த எல்லைக் காளி சைவப்பெரியார் சாண்டோ முத்தையா சாமியாரின் மூலம் கடந்த 1950களில் வெளிப்பட்டு மீண்டும் அம்பாள் அடியார்களின் கண்ணுக்கு விருந்தளித்து அருள்புரிய ஆரம்பித்துள்ளாள்.

சைவசித்தாந்த சிகாமணி, சைவப்புலவர் பண்டிதர் அமரர் இ.வடிவேல் ஐயா அவர்களது திருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள் என்ற நூலில் பன்குளம் பறையன்குளம் எல்லைக் காளி அம்பாள் பற்றிய குறிப்பில் (பக்கம் - 91) சைவப்பெரியார் சாண்டோ முத்தையா சாமியாருடன் கலந்துரையாடி பெறப்பட்ட தகவல்களைத் தந்துள்ளார்

சைவப்பெரியார் சாண்டோ முத்தையா சாமியார் அவர்களினால் ஆதரிக்கப்பட்ட அன்னையின் ஆலய பரிபாலனத்தை 1972ம் ஆண்டு தனது சுய விருப்பத்தின் பேரில் திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஸ்தாபகச் செயலாளர் “சிவஞானச்செல்வர்” திரு செல்லப்பா.சிவபாதசுந்தரம் அவர்களிடம் கையளித்து 1980களில் திருக்கோணேஸ்வரத்தின் சுற்றுப்புறங்களில் தவமிருந்து அண்மையில் கடந்த 2004ம் ஆண்டளவில் தனது ஆன்மீக வாழ்க்கையை நிறைவு செய்து இறைவனடி சேர்ந்தார்.

1972ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அருள்மிகு எல்லைக்காளி அம்பாளின் பரிபாலனத்தை திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர் தமது சக்திக்கு எட்டிய வரை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

எல்லைக்காளி அம்பாள் மீது பற்றுள்ளம் கொண்ட திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர் 1982ம் ஆண்டளவில் சிற்பாசாஸ்திர முறைப்படி அம்பாளுக்கு ஆலயம் அமைக்க முற்பட்டு திருப்பணி வேலைகளை ஆரம்பித்தனர்.

திருக்கோணமலை சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் அமரர் கே.கே.சுப்பிரமணியம் அவர்களால் அம்பாளுக்குரிய புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டதுடன் காந்தீய அமைப்பின் ஆதரவுடன் ஆலயத்திற்கான கிணறும் கட்டப்பட்டு 45 தமிழ்க்குடும்பங்கள் குடியேற்றப்பட்டு; அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான விவசாய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான பண்ணைக்கிணறுகள் இரண்டும் கட்டப்பட்டதுடன். ஆலய திருப்பணி வேலைகளும் சிறிது சிறிதாக மேலே எழும்பியது.

தைப்பூச தினத்தில் மகுடாகம முறைப்படி (கிராமிய முறைப்படி) விசேட வழிபாடுகள் நடத்தப்பட்டு பொங்கிப்படைத்து திருக்குளிர்த்தி வேள்விகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் ஒரு தைப்பூசக் குழுவும் அமைக்கப்பட்டு பன்குளம் இந்து இளைஞர் மன்றமும் உருவாக்கப்பட்டு தைப்பூசப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வந்திருக்கின்றது.

இதற்கான வளந்து மடைப்பெட்டிகள் பன்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து எடுக்கப்பட்டு வந்திருக்கின்றது.

இதன்போது நடைபெற்ற ஓரு அற்புதத்தை திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஸ்தாபக செயலாளரும் தற்போதைய பிரதம ஆலோசகருமான “சிவஞானச் செல்வர்” திரு.செல்லப்பா.சிவபாதசுந்தரம் அவர்கள் கூறியதை தருவது பொருத்தமுடையது.

கோயில் அமைப்பதற்காக காலம்காலமாக இருந்த இடத்திலிருந்து அம்பாளை தூக்குவதற்கு மனதில் தயக்கம் இருந்ததாகவும் கோணேஸ்வரா பதிப்பக உரிமையாளர் சண்முகரெத்தின சர்மா ஐயா அவர்களின் அறிவுரையின் பிரகாரம் ஒரு கன்றுக்குட்டியை நூலினால் அம்பாளின் திருவுருவத்துடன் இணைத்து கன்றுக்குட்டி அசைந்ததும் தூக்கினால் முடியும் என்ற அறிவுரையே அதுவாகும்.

ஆழக்காட்டில் உள்ள அம்பாளின் ஆலயத்திற்கு கன்றுக்குட்டியுடன் வந்த வாகனம் தடம்புரண்டது. ஏல்லோரும் துனுக்குற்றனர். எனினும் வண்டியை எதுவித சேதமுமின்றி ஓடக்கூடிய நிலையில் மீட்டெடுத்து பயணத்தை தொடரக்கூடியதாக இருந்ததாகவும் அம்பாளின் மீது பாரத்தை போட்டு வணங்கி மேற்சொன்னபடி கன்றுக்குட்டி அசைந்நதும் அம்பாளின் திருவுருவத்தை தூக்கி தற்போது உள்ள இடத்தில் பாலஸ்தாபனம் பண்ணியதாகவும் கூறினார்.

பூரணமற்ற மும்மலங்கள் பொருந்திய மனிதரின் வலிமையைவிட அன்புள்ள ஒரு கன்றுக்குட்டியின் எளிமையான உடல் அசைவிற்கும் ஒரு நூலுக்கும் அம்பாள் அடிபணிந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டாள்.

மீண்டும் மறைந்து அருளல்

1983ம் ஆண்டு ஆடி மாதம் ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத ஆண்டு. அதனையும் அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளும் தமிழரை பொசுக்கின. அவர்தம் நாகரீகம், பண்பாடு,கல்வி,பொருளாதாரம் போன்றவை சிதைந்தன. தமிழர்கள், இந்துக்கள் மட்டுமன்றி அவர்தம் இறைவரும் மறைந்தனர். நாம் செய்த அபச்சாரமா? தெய்வக்குற்றமா? இந்துக்கள் நம்பும் முற்பிறப்பு கர்மாக்களா? எமது வலிமையின்மையா? இன்று வரை விடையில்லை. ஆனால் அழிந்தது உண்மை. கோணேசருக்கே விளக்கில்லை எனக்கெதற்கு பூசை என்று அவரது எல்லைக்காவல் தெய்வமான எல்லைக் காளி நினைத்தாளோ? அல்லது குற்றம் செய்தவரை தண்டித்து மோட்சமளிக்க மறக்கருணை புரிந்தாளோ? என்னவென்று விளங்கவில்லை.

நரபலி விழுந்தது. அவளது மண் குருதியில் நனைந்தது. ஆம்! 1983 ஆடிக்கலவரத்தில் பன்குளத்திலும் பறையன்குளத்திலும் புதிதாக குடியேற்றப்பட்ட நிலங்கள் வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டன. 10 பேர் கொல்லப்பட்டனர். வாழையடி வாழையாக வாழ்ந்தவர்கள் ஏதிலியானர். வயல்கள் காடாகின. வாய்க்கால்கள் வற்றின. வழித்தடம் அழிந்து பாதைகளை மூடிப்புற்கள் வளர்ந்தன. மரம், செடி கொடிகள் படர்ந்தன. விலங்குகள் பெருகின. கட்டிய குறைக்கோயிலும் சிதைந்தது அடர்வனத்தில் தவமிருப்பதைப்போலும் எல்லைக் காளியும் மோனத்தவத்தில் மூழ்கினாள்.

வெளிப்பட்டு அருளல்

ஏறத்தாள 28 ஆண்டுகளுக்குப் பின்பு மூலநாதரான திருக்கோணேஸ்வரப் பெருமானுக்கு மீண்டும் குடமுழுக்குக் கண்டு நித்திய பூசைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே எல்லைக்காளியும் தவம் கலைந்து தம்மை வெளிப்படுத்த திருவுளம் கொண்டாள்.

அன்று சைவப்பெரியார் சாண்டோ முத்தையா சாமியார் காடு முழுவதும் தேடியலைந்ததைப் போல 2010ம் ஆண்டு திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர் நல்லகுட்டியாற்று முஸ்லீம் அன்பர்களின் உதவியுடன் பறையன்குளக் காடுகளினுள் தேடி பாதை வெட்டி எல்லைக்காளி அம்பாளின் திருவுருவைக் கண்டு ஆனந்தமடைந்தனர்.

எல்லைக்காளியின் ஆலயத்திற்கு செல்லும் பாதையையும் ஆலய சுற்றாடல் பகுதியையும் முதலிக்குளம்,பன்குளம் பகுதிவாழ் அனைத்து அன்பர்களின் ஒத்துழைப்புடன் சிரமதானம் மூலம் துப்பரவு செய்து ஆலய கிணற்றையும் இறைத்து மீண்டும் 2010ம் ஆண்டிலிருந்து தைப்பூசத்தன்று எல்லைக்காளிக்கு விசேட பூசை அபிசேகங்கள் நடத்தப்பெற்று தொடர்ந்து பேரவையின் திட்டப்படி பிரதி மாத நோன்மதி தினங்களிலும் பூசைகள் நடைபெறுகின்றன.

இப்பூசைகள் மாவட்டத்தின் கட்டுக்குளப்பற்று, தம்பலகாமப்பற்று, கொட்டியாரப்பற்று மற்றும் பன்குளம் பகுதியின் சகல கிராமங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இப்போது புதிய முகங்கள் புதிய பக்தர்கள் அயல் கிராமங்களில் உள்ள பௌத்தர்கள், இஸ்லாமியர்கள் என எல்லாச் சமூகத்தவர்களும் எல்லைக்காளியை ஆராதிக்கின்றனர். அம்பாளின் ஆட்சியில் வேற்றுமையை மறந்து வழிபடுகின்றனர்.

எல்லைக் காளி இன்று

எல்லைக்காளி உக்கிரமூர்த்தி. நிகரற்ற அன்பும் அருளும் கொண்டவள். அதேவேளை குற்றங்களை பொறுக்காத கருணையற்ற தண்டனைகளும் அவளது அருளாகும். உண்மையில் கழகப்புலவர் சிவசேகரனாரின் காளி கவி மாலையின் அடிகள் ஞாபகத்திற்கு வருகின்றது.

“மெல்லத்திருத்தி மிடுக்கர் தமை வாட்டி மீட்டெடுப்பாள்

பள்ளத்தே வீழ்ந்த பறையர் கடைத்தேற பாட்டிசைத்தாள்

காந்தம் போலீர்க்கும் காளி கருணைக்கடைக் கண்களே”

எல்லைக்காளி நினைக்காமல் யாரும் அவளை தரிசிக்க முடியாது. போக வேண்டும் என நினைத்தவர்க்கு தடையும் போய் பிழை செய்தவர் மீண்டும் போக முடியாமையும் அவளைப்பற்றி அறியாதவர்களை எதிர்பாராத விதமாக ஏனையவர்களோடு சேர்த்தும் கோர்த்தும் வரவளைத்துத் தரிசனமளிப்பதும் நிதர்சனமான உண்மைகளாகும்.

அடியவர்களுடன் அளவளாவும் போது மேற்சொன்ன அற்புதங்கள் அவர்தம் வாழ்வில் நடைபெற்றதை உணரமுடிந்தது.

திருக்கோணமலை வவுனியா பாதையில் முதலிக்குளம் பன்குளம் சென்று வலது கைப்பக்கமாக உள்ளே நல்லகுட்டியாறுவரை (இன்றைய நாமல்வத்தை) சென்று நல்லகுட்டியாற்றில் இருந்து ஆரம்பமாகும் காட்டுப்பாதையில் சுமார் 7½ கிலோ மீற்றர் தூரம் வரை ஆழக்காட்டினுள் செல்ல வேண்டும்.

உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் போக முடியும் என்றாலும் மழைகாலங்களில் பெருகும் காட்டாற்றாலும் சகதியினாலும் பயணம் கால் நடையாக திசை மாறும்.

இப் பயணத்தில் அடர்ந்த காடுகளும் “விக்ஸ்” மரக்காடுகளும் மனதை ஒருமுகப்படுத்தி ஏனைய சிந்தனை ஓட்டங்களை வெட்டி அறுத்து ஒரு ஆன்மீக பயணத்திற்கு உங்களை தயார் படுத்தும். சத்தம் சந்தடியும் வாகனப்புகையும் பிளாஸ்டிக் குப்பைகளும் நிறைந்த நகர வாழ்க்கையிலிருந்து திசை திருப்பி மனதை தளர்வடையச் செய்யும்.

போதாக்குறைக்கு இன்றைய பல மன அழுத்தங்களுக்கு மூலகர்த்தாவான செல்லிடப்பேசி வேலை செய்வதற்கான ‘கவரேஜ்” இல்லை எனவே கதைப்பதென்றால் அருகில் துணைவரும் அடியவருடனோ அல்லது எல்லைக்காளி அம்பாளுடனோ மட்டுமே முடியும்.

தவிர அது ஒரு அடர்ந்த வனப்பகுதி மட்டுமல்ல அனைத்து வனராசிகளும் நிறைந்த இடம். யானைக்காடு. சிலவேளைகளில் யானைக்கூட்டம் குறுக்கறுக்கும். எனவே எல்லைக்காளியிடம் பூரண நம்பிக்கை வைத்து நேர்ச்சிந்தனையுடன் செல்ல வேண்டும்.

சலசலத்தோடும் சிற்றாறுகளும் அலைபுரளும் காட்டாறுகளும் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும்.

எல்லைக்காளி எளிமையானவள். அவளை வழிபடும் முறையும் எளிமையானது. மந்திரம் கற்ற தந்திரப்பிராமணர் ஓதும் வேதம் தேவையில்லை என ஒதுக்கி ரீங்காரம் செய்யும் வண்டுகளின் ஓசையும் கீச்சிடும் புள்ளினங்களின் ஓசையுமே தனக்குகந்த மந்திரமாக்கி யானையின் பிளிறலையும் பலவித விலங்கினங்களின் ஓசையும் நீண்டுயர்ந்த மரக்கிளைகளின் அசைவையும் அதனோடு ஊடறுக்கும் காற்றின் ஓசையும் தனக்குகந்த மணியொலியாகவும் வாத்திய இசையாகவும் கருதி இடி மின்னல் காட்டுத்தீயை வேள்வியாக்கி மழையையே அபிசேகமாக்கி சிற்றோடையின் சலசலப்பையும் மரங்களை புரட்டும் காட்டாற்றின் ஓசையையும் குளிர்த்திப் பாடலாக்கி சுயநலம் மிகுந்த மனிதரை தவிர்த்து இயற்கையோடு இணைந்து தான் எல்லா உயிர்களுக்கும் தாயானவள் என்பதை உணர்த்தி நிற்கும் பெரும் தத்துவமே எல்லைக்காளி.

அவள் எல்லையில்லாதவள். காலத்தைக்கடந்தவள். நல்லவரை ஈர்க்கும் காந்தம். தீயவரை பொசுக்கும் தீ. அவள் மின்சாரம் போன்றவள். வீரம் ,துணிவு நேர்மை,எளிமை என்ற கவசங்களோடு தீண்டினால் இன்பம். இக்கவசமற்று தந்திரம்,கயமை,சுயநலத்தோடு நெருங்கினால் அழிவு.

இதுவே அவளது திருக்கோலம் உணர்த்தும் உண்மை. சூழல் மனதைப் பண்படுத்த நடப்பதால் உடல் பண்பட அவளது திருவுருவை நோக்கினால் ஞான ஒடுக்கம் நிச்சயம். நல்வாழ்வும் நிச்சயம்.

கையில் வெண்ணெய்யை வைத்து நெய்க்கு அலைவதுபோல் கடலலை தாலாட்டும் திருக்கோணமலைக் குன்றின்மேல் அமர்ந்து திருக்கோணமலைக்கே அரசனாக வீற்றிருக்கும் மாதுமையம்பாள் சமேத திருக்கோணேஸ்வரப் பெருமானும் பறையன்குள வனத்தினுள் தில்லையிலே தில்லைக்காளியைப் போன்று திருக்கோணமலைக்கே எல்லைக்காளியாக விளங்கும் அன்னை பராசக்தியும் இருக்கத்தக்கதாக திருத்தல யாத்திரையும் ஆன்மீக தேடல் என்று குருமாரின் பின்னால் ஓடுவதும் தேவையில்லை. ஒரு முறை வாருங்கள் அருள்மிகு எல்லைக்காளி அம்பாளை தரிசியுங்கள் நன்மை நிச்சயம்.

காளி துணையிருப்பாள் கலக்கம் தீர்த்துநிற்பாள்

நாடி வரும் அன்பர் நலிவு போக்கிடுவாள்”

எழுதியவர் மருத்துவர் ரெட்ணரஞ்சித்












மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US