இந்தியாவில் ரயில் தடம்புரண்டு பாரிய விபத்து: 207 பேர் உயிரிழப்பு! 900 பேர் படுகாயம்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு "எல்லா உதவிகளும்" வழங்கப்பட்டு வருவதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Distressed by the train accident in Odisha. In this hour of grief, my thoughts are with the bereaved families. May the injured recover soon. Spoke to Railway Minister @AshwiniVaishnaw and took stock of the situation. Rescue ops are underway at the site of the mishap and all…
— Narendra Modi (@narendramodi) June 2, 2023
இந்த மோதல் ஒரு "கடுமையான விபத்து" என்று மேற்கு வங்காளத்தின் தலைமைச் செயலாளர் எச் கே திவேதி செய்தியாளர்களிடம் கூறினார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் அதிவேக புகையிரதம் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பெங்களூருவில் இருந்து கொல்கத்தா சென்ற புகையிரதம் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விபத்து நிவாரண ரெயில் விரைந்துள்ளதாக தென் கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும், 50 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன.