தமிழர் பகுதியில் மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் நெகிழ்ச்சி செயல்
வவுனியா மாநகரசபை உறுப்பினர் ஒருவர் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்த பகுதிகளில் தனது சொந்த நிதியில் வாகனத்தை கூலிக்கு அமர்த்தி நீர் விநியோகம் மேற்கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குள வட்டார உறுப்பினரான ஒருவராலேயே குறித்த வேலைத்திட்டம் இன்று (22) மேற்கொள்ளப்பட்டது.
நீர் விநியோகம்
வவுனியா நகரின் சில பகுதிகள், மன்னார் வீதி, குருமன்காடு, நகரசபை விடுதி, அரச விடுதிப் பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை (21) பிற்பகல் 3 மணி முதல் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பினால் வழங்கப்படும் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டு சுமார் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.
இதனால் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், அரச விடுதிகள், வீடுகள் என்பவற்றில் தமது அன்றாட செயற்பாடுகளுக்கு நீரைப் பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கினர்.
இந்நிலையில் வவுனியா மாநககர சபை உறுப்பினர் நீர்தாங்கி வாகனம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி அதன் மூலம் அப் பகுதியில் உள்ள மக்களது வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தானே நீரை எடுத்துக் கொடுத்து மக்களது அவசர நீர்த்தேவையை பூர்த்தி செய்துள்ளார்.
இவரது முன்மாதிரியான செயற்பாடு மக்களது பாராட்டைப் பெற்றுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் விநியோக குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த வெடிப்பு புகையிரத தண்டவாளத்திற்கு கீழ் உள்ள குழாயில் ஏற்பட்டுள்ளதால் புகையிரத திணைக்க அதிகாரிகள் வருகை தந்த பின்னரே அதனை சீர் செய்ய முடியும் என்பதாலேயே தாமத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிது.