இலங்கைக்குள் நுளையும் அமெரிக்காவின் உயர் மட்ட இராஜதந்திரிகள்
அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கான உதவிச்செயலாளர் டொனால்ட் லூ ஆகியோரே இவ்வாறு விஜயம் செய்யவுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்டின் விஜயமானது இம் மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இராஜாங்க தினைக்களத்தின் மூத்த இராஜதந்திரியான விக்டோரியா நுலாண்ட் கொழும்பு விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சியினரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வேளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் டொனால்ட் லூவும் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
அவரது விஜயத்தின்போது அரச தரப்பினருடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களில் குறிப்பாக மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.
2021 ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து உதவிச்செயலாளர் டொனால்ட் லூவு கலந்துரையாடியிருந்தார்.
இதன் போது மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி நிறைபேறான சமாதானத்தை அடைந்துகொள்வதற்கான தேடலிலும் தமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்வதிலும் இலங்கைத்தமிழ் மக்களுடன் அமெரிக்காவும் இணைந்துகொள்வதுடன் அதற்காகக் குரல்கொடுக்கும் என்றும் அவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறுப்புறம் வாஷிங்டன் தளமாகக் கொண்ட உலகளாவிய மூலோபாய ஆலோசனை மற்றும் வணிக இராஜதந்திர நிறுவனத்தின் மூத்த ஆலோசகரா பணியாற்றியுள்ள அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்டின் இலங்ஙை விஜயமும் முக்கியமானதொன்றாகியுள்ளது.
32 ஆண்டுகளாக அமெரிக்க இராஜதந்திர தூதவராக பணியாற்றியுள்ள விக்டோரியா நுலாண்ட் , ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் செயலாளர் ஜோன் கெரியின் கீழ் 2013 - 2017 வரை ஐரோப்பிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளராக பணியாற்றினார்.
செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் பதவிக்காலத்தில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராகவும், 2005 - 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் இரண்டாவது பதவிக் காலத்தில் நேட்டோவுக்கான அமெரிக்க தூதராகவும் செயற்பட்டுள்ளார்.
மேலும் 2010 - 2011 வரை ஐரோப்பாவில் மரபு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தத்தில் சிறப்புத் தூதுவராகவும் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் இருந்துள்ளார். 2003 - 2005 வரை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நுலாண்ட் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பல்வேறு திட்டங்களில் ரஷ்யா, சீனா மற்றும் மங்கோலியாவில் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு மூத்த இராஜதந்திர அதிகாரியை அமெரிக்கா இலங்கைக்கு அனுப்புகின்றது. ஜனாதிபதி ஜோ பைடனின் முக்கிய செய்தியுடனேயே விக்டோரியா நுலாண்ட் இலங்கை வருவதாக கொழும்பு இராஜதந்திர தகவல்கள் குறிப்பிடுகின்றன.