மத்திய கிழக்கு போரை நிறுத்த உலக நாடுகளிடம் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நாடுகள் தலையிட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (02) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மஹிந்த மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசை
மத்திய கிழக்கில் போர் மூண்டுள்ள நிலையில், அதன் நேரடித் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மத்திய கிழக்கு பிராந்திய போர் அச்சம் காரணமாக நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகியுள்ளன.
இந்தப் போர் நிலைமை விரைவில் முடிவுக்கு வர வேண்டும். அதனை உறுதிப்படுத்த ஏனைய உலக நாடுகள் உடனடியாகத் தலையிட்டு மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை என அவர் தெரிவித்தார்.
இதன்போது முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி கைது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், குறித்த கைதுக்கான காரணம் தமக்குத் தெரியாது என கூறியதுடன், 'நிச்சயமாக அந்தக் கைதுக்கு ஒரு காரணம் இருக்கும். அது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்' என்றார்.
கைது நடவடிக்கையானது ஒரு அரசியல் பழிவாங்கல் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வினவிய போது, 'அவ்வாறு இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இன்று அரசியல் பழிவாங்கல்கள் சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றன' என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்தார்.