21 ஊடாக பெருமளவிலான அதிகாரங்கள் நாடாளுமன்றிற்கு உரித்தாக்கப்படும்
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூல வரைபிற்கமைய பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசமாகும் என தெரிவித்த நீதி மற்றும் அரசியலமைப்பு திருத்த மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ , அதே போன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தில் பெருமளவிலான அதிகாரம் நாடாளுமன்றிற்கு உரித்தாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இரட்டை குடியுரிமையாளர் அரசியலில் செல்வாக்கு செலுத்த வாய்ப்பு வழங்கப்படும் என 'சுபீட்சமான எதிர்காலம்'கொள்கை திட்டத்தில் குறிப்பிடவில்லை. மக்கள் ஆணைக்கு முரணாகவே இரட்டை குடியுரிமையாளர் அரசியலில் பிரவேசித்தார்.
தற்போது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், 21ஆவது திருத்தத்திற்கு எதிராக செயற்படுபவர்களை மக்கள் கவனித்துக்கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பின்பற்றிய தவறான பொருளாதார முகாமைத்துவம் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி அதனை தொடர்ந்து அரசியல் நெருக்கடியினை தீவிரப்படுத்தி சமூக கட்டமைப்பின் ஸ்தீரத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியதை தொடர்ந்து தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தின் முதற்கட்ட பணியாக அரசியலமைப்பின் 21ஆம் திருத்தத்தை நிறைவேற்ற அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு,அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மீண்டும் நடைமுறைப்பபடுத்தப்பட வேண்டும் என நாட்டு மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஜனநாயக இலட்சினங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் அரசியலமைப்பு பேரவைக்கும்,சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும்,பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் திருத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் பதவி காலம் மற்றும் நாடாளுமன்றம் கலைத்தல் தொடர்பில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் விடயதானங்கள் ஏதும் 21ஆவது திருத்த யோசனையில் மாற்றியமைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், அத்தியாவசிய விடயங்களில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முப்படைகளின் தளபதி என்ற ரீதியில் பாதுகாப்பு அமைச்சினை வகித்தல் அவசியமாகும். பாதுகாப்பு அமைச்சினை ஜனாதிபதி பிற தரப்பினருக்கு கையளிக்க கூடாது எனவும்,அவர் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்க வேண்டும் எனவும் அரசியலமைப்பின் 3(4) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு பதவி வகிப்பது தொடர்பில் 2003ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவையின் செயலாளர்கள்,மத்திய வங்கியி;ன் நாணய சபை உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபை ஊடாக நியமிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை பரிசீலனை செய்யப்படுகிறது.
21ஆவது திருத்தத்தை தொடர்ந்து புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக பாராளுமன்ற தெரிவு குழு ஒன்றை ஸ்தாபிக்குமாறு யோசனை முன்வைத்துள்ளேன். அரசியல் வரலாற்றில் பெரும்பான்மை பலம் உள்ள அரசாங்கம் நாட்டுக்கு எதிராக செயற்படும் போது பெரும்பான்மை பலம் இல்லாத அரசாங்கம் நாட்டுக்கு சாதகமான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதை எவரும் மறுக்க முடியாது.
பெரும்பான்மை பலமில்லாத அரசாங்கம் கொண்டு வந்த 17ஆவது திருத்தத்தை பெரும்பான்மை பலமிக்க அரசாங்கம் நீக்கி 18ஆவது திருத்தத்தை கொண்டு வந்தது. அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை பெரும்பான்மை பலமில்லாத நல்லாட்சி அரசாங்கம் நீக்கி 19ஆவது திருத்தத்தை கொண்டு வந்தது.
19ஆவது திருத்தத்தை பொதுஜன பெரமுன அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் நீக்கி அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை கொண்டு வந்தது. தற்போது பெரும்பான்மை பலமில்லாத அரசாங்கம் 21ஆவது திருத்தத்தை சமர்ப்பித்துள்ளது. ஆகவே பெரும்பான்மை பலம் இல்லாத அரசாங்கம் நாட்டுக்கு சிறந்த தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
இரட்டை குடியுரிமையுடையவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என முழு நாட்டு மக்களும் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்திற்கு முழுமையாக ஆதரவு வழங்க வேண்டும்.
மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்கிறார்கள் தமது நிலைப்பாட்டுக்கு அமைய செயற்பட வேண்டுமே தவிர தனி நபரையும் ஒரு குடும்பத்தையும் பாதுகாப்பதற்கல்ல என்பதை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.