தமிழர் பகுதியொன்றில் இரவில் வசமாக பிடிபட்ட மூவர் ; வாவி நீருக்குள் காத்திருந்த அதிர்ச்சி
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்புப் பகுதியில், வாவியின் நீருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 50,000 மில்லி லீட்டர் கசிப்புடன் மூன்று சந்தேக நபர்களை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இச்சுற்றிவளைப்பு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை 6.00 மணி வரை சுமார் 12 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்டது.

தீவிர சோதனை
மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் விசேட பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த பகுதியில் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது, ஆரையம்பதியைச் சேர்ந்த இருவரும் மாவிலங்கத்துறையைச் சேர்ந்த ஒருவருமாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின் போது 8 பரல்கள், கசிப்பு வடிக்கப் பயன்படுத்தப்படும் 2 கலன்கள் மற்றும் பெருமளவிலான மதுபானம் என்பன மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட மதுபானப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.