தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கிடையாது; மஹிந்த காட்டம்!
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கிடையாது என்றும் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் இன்று (21) காலை நாடாளுமன்ற அமர்வு கூடிய போது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சபை பீடத்திற்கு வருகை தந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சபாநாயகர் சபை நடவடிக்கைகளை நாளை காலை 09.30 மணிவரை ஒத்திவைத்தார்.
தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி
இதன் பின்னர் நாடாளுமன்ற பிரதான கட்டத்தொகுதிக்கு வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்றும் பிற்போடப்பட்டவில்லை.அத்துடன் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது என்றும் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
அத்துடன் கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளதாகவும் மகிந்த தெரிவித்தார்.
மேலும் நெருக்கடியான காலக்கட்டத்திலும் தேர்தல்கள் பல நடத்தப்பட்டுள்ளன. ஆகவே தேர்தலுக்கு அச்சமடைய தேவையில்லை. அரசியல் தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் நாட்டு மக்களுக்கு உண்டு என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்