மட்டக்களப்பில் தும்புத்தடியுடன் தேரர் அடாவடி; ஜனாதிபதி கட் அவுட் முன்னால் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு - மயிலத்தமடு பிரதேசத்தில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.
மட்டக்களப்புக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் மேற்படி பயிர்செய்கையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி கட் அவுட் தும்புத்தடியால் துடைத்த தேரர்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தினை முன்னிட்டு 'ரணிலுக்காக நாம் 2024' என்ற பாரிய கட்டவுட் ஒன்று மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்ட குழுவினர் ஜனாதிபதியின் கட்டவுட் முன்னால் தும்புத்தடியோடு நின்றவாறும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபரே கேளுங்கள் சிங்களவர்களை துரத்துகின்றார்கள், சாணக்கியன் தொண்டமான் எமக்கு வேண்டாம்,இனவாதம் தூண்ட வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை தங்கள் கால்நடைகளின் பாரம்பரிய மேய்ச்சற்தரையாக விளங்கும் மயிலத்தமடுவில் கால்நடைகளை பாதுகாப்பாக மேய்ப்பதற்கு இடமளிக்குமாறு கோரி கால்நடை வளர்ப்பாளர்களின் முன்னெடுத்த தொடர் போராட்டம் இன்றுடன் 23 நாட்களாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.