நீர்கொழும்பில் இடம்பெற்ற கொடூர சம்பவம்!
நீர்கொழும்பு - தழுவகொட்டுவ பகுதியில் காவலாளியை கொலை செய்துவிட்டு காருக்கு பயன்படுத்தும் பக்க கண்ணாடியை திருடிய சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது.
கார் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றுக்குள் புகுந்த இரு கொள்ளையர்கள் அங்கிருந்த காவலாளியை தாக்கி கை மற்றும் வாய், கால்களை கட்டி்போட்டுவிட்டு காருக்கு பொருத்தும் பக்க கண்ணாடி ஒன்றை திருடியுள்ளனர்.
அதன் பின்னர் காவலாளியின் கட்டை அவிழ்த்தபோதும் வாய்ப் பகுதியை மூடி கட்டியதால் மூச்சுத் திணறி காவலாளி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து பதறிய கொள்ளையர்கள் காவலாளியின் முகத்தில் நீரை தெளித்து அவரை எழுப்புவதற்கு முயற்சித்தமை அங்கு பதிவான சீசிரீவி காணொளி மூலம் தெளிவாகியுள்ளது.
பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகம்
இந்த நிலையில் இது கொலை நோக்கத்துடன் செய்யப்பட்ட ஒன்றல்ல என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் உயிரிழந்தவர் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 66 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.