யானை தாக்கியத்தில் 3 பிள்ளைகளின் தாயாருக்கு நேர்ந்த கதி
யானை தாக்கி படுகாயமடைந்த 3 பிள்ளைகளின் தாயார் 4 நாள்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
சதானந்தன் சுதா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார். மன்னார் - அடம்பன் பகுதியில் கடந்த 13ஆம் திகதி அதிகாலையில் வீட்டு வளவுக்குள் புகுந்த யானை குறித்த பெண்ணைத் தாக்கியுள்ளது.
அதிகாலை ஒரு மணிக்கு வீட்டுக்கு முன் உள்ள வீதியில் சத்தம் கேட்டுள்ளது. அதனால் வெளியே வந்த குடும்பத்தலைவர் ரோச் லைட் அடித்து பார்த்துள்ளார்.
அவரது மனைவியும் வீட்டு முற்றத்துக்கு வந்துள்ளார். அப்போது யானை ஒன்று வீட்டு வளாகத்துக்குள் நுழைந்து இருவரையும் தாக்க வந்துள்ளது. கணவர் வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டியுள்ளார்.
வீட்டுக்கு வெளியில் இருந்த மனைவி ஓடி மறைவாக இருந்துள்ளார். வீட்டுக்குள் நுழையாத யானை மறைவில் இருந்த பெண்ணைத் தாக்கிவிட்டு அங்கிருந்த மரங்களையும் அடித்து முறித்து விட்டுச் சென்றுள்ளது.
யானை தாக்கி படுகாயமடைந்த பெண், மன்னார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் நான்கு நாள்களின் பின் நேற்று முற்பகல் 9 மணிக்கு சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்தார்.