இலங்கையில் வாகன சாரதிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் வாகனம் செலுத்தும் போது தவறு செய்யும் சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த கால தாமதமாகும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களை ஏற்படுத்துமு் 32 போக்குவரத்து பிழைகளை கண்டறிந்து அவற்றுக்காக சாரதிக்கு புள்ளிகளை வழங்கும் திட்டத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த முறைப்படி, 24 புள்ளிகள் பெற்றால், ஓட்டுனர் உரிமம் ஓராண்டுக்கு இரத்து செய்யப்படும். இந்த நடைமுறை இம்மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், காலதாமதம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறைக்கமைய, முறையான சமிக்ஞை வழங்க தவறியமை அல்லது தவறான சமிக்ஞைகளை வழங்குதல், கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி வாகனம் ஓட்டுதல், விபத்தைத் தவிர்க்கத் தவறுதல், ஆசன பட்டி அணியாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிக சத்தம் ஆகியவற்றிற்கு தலா மூன்று புள்ளிகள் சேர்க்கப்படுகின்றன.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட பாதையில் வாகனம் ஓட்டாமல் இருப்பது, தவறாக முந்திச் செல்வது, முந்திச் செல்ல இடம் கொடுக்காதது, போக்குவரத்து விதிகளை மீறுவது, ஒரு வீதியில் இருந்து மற்றொரு வீதிக்கு செல்லும் போது விதிகளை மீறுவது, மோட்டார் வாகனத்தை நீண்ட தூரம் பின்னோக்கி ஓட்டுவது, சிறு விபத்துகள் குறித்து முறைப்பாடு தெரிவிக்காமல் இருப்பது போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு புள்ளி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.