காதலிக்க மறுத்த சிறுமி; தீ வைத்து தப்பியோடிய காதலன்
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பரமக்குடியில் வசித்து வரும் நிலையில் அவரது 17 வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்று இளைஞரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்த பழக்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து 17 வயது சிறுமி, அந்த இளைஞரிடம் நாம் இருவரும் நண்பர்களாக பிரிந்து விடுவோம் என்று தெரிவித்ததாகவும், ஆனால் சந்தோஷ் விடாமல் தொடர்ந்து 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
காதலனின் மோசமான செயல்
இந்நிலையில் கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் சந்தோஷ் மீது சிறுமியின் தாயார் பரமக்குடி பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு கொடுத்துள்ளார். இதனை விசாரித்த பொலிஸார் வழக்கை முடித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகும், சந்தோஷினால் பிரச்சினை வந்ததால் சிறுமியை அவரது தாயார் தனது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
17 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில் கடந்த 23ஆம் திகதி சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தீ பற்றி எரிந்த நிலையில் 17 வயது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சந்தோஷ் தன்னை காதலிக்க வேண்டும் என தொந்தரவு கொடுத்ததாகவும், தான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது நண்பரான முத்தையா என்பவரும் சேர்ந்து தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.