யாழ் காங்கேசன்துறை இளைஞனின் சடலம்: துலங்கியது மர்மம்
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது, நேற்று முன்தினம் (16) மாலை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில், வீதியோரமாக வீழ்ந்து கிடந்த இளைஞன் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
எனினும், வைத்தியசாலையில் மேற்கொண்ட பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. கீரிமலை, நல்லிணக்கபுரத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதான ம.ஜெனுசன் என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டார்.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில், காங்கேசன்துறை பிரதான வீதியில் சடலம் காணப்பட்டது. இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
காலணிகளும் சிதறிக் காணப்பட்டன, அந்த காலணிக்குரியவர்கள் இன்று இளைஞனுடன் முரண்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. நல்லிணக்கபுரத்தில் அன்று நடைபெற்ற மரணவீட்டில் இளைஞர்கள் சிலர் மது அருந்திய பின்னர் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்டவர்கள் பொலிஸ் நிலையம் வந்த போதோ அல்லது பொலிஸ் நிலையம் வந்த இளைஞனை யாராவது விரட்டி வந்து தாக்கினார்களா என்ற சந்தேகம் நிலவியது. அந்த பகுதியில் இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டதை பாதசாரிகள் அவதானித்துள்ளனர்.
எனினும், இளைஞன் உயிரிழந்த போது யாரும் அவதானித்திருக்கவில்லை. இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இளைஞனின் பின் தலையில் காயம் காணப்படுட்டது.
இளைஞன் கொலை செய்யப்பட்டதாக வலியுறுத்தி உறவினர்கள் நேற்று மாலை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இளைஞனின் சடலம் இன்று பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது, இதில், இளைஞனின் பின் தலையில் கூரிய ஆயுதத்தினால் தாக்கியதால் மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மரண வீட்டில் இளைஞனுடன் முரண்பட்டவர்கள் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டார்களா என்பதை பொலிசார் ஆராய்ந்து வருகிறார்கள்.