கும்பாபிஷேகத்திற்கு தயாரான ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தால் கவலையில் பக்தர்கள்!
மட்டக்களப்பு - ஏறாவூர் நான்காம் குறிச்சி எல்லை நகர் பகுதியில் அமைந்துள்ளஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் பக்தர்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலய கும்பாபிஷேக பணிகளுக்காக ஆலய எழுந்தருளி விக்கிரகம், தொன்மை வாய்ந்த விக்கிரகங்கள், பூஜை பொருட்கள் போன்றன தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்தது.
நடவடிக்கை எடுக்காத பொலிசார்
இந் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 01.30 மணியளவில் ஆலயத்தின் மூல ஸ்தானம் உடைக்கப்பட்டு சிலைகள் களவாடப்பட்டுள்ளதுடன் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளமை அங்கிருந்த சீசீரீவி கெமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினரால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என ஆலய பரிபாலன சபையினர் விசனம் வெளியிட்டுள்ளனர்.