அபாய கட்டத்தில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய புற்றுநோய் சிகிச்சை மையம்
வடக்கு மாகாணத்தின் முக்கிய புற்றுநோய் சிகிச்சை மையமாக விளங்கும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எதிரான திட்டமிட்ட முயற்சிகள், தற்போது அதன் இயங்கு திறனை முற்றாக பாதிக்கும் நிலையினை நோக்கி நகர்ந்துள்ளன.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சில அனுசரணையாளர்களின் கடுமையான உழைப்பின் ஊடாக நிறுவப்பட்ட இவ்வைத்தியசாலை, இன்று வரை ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு உயிருக்குப்போராடும் வாழ்வதார சிகிச்சையைக் வழங்கி வருகிறது.
ஆனால், அப்போதும் இப்போதும் தொடர்ந்து சிலர் மேற்கொள்ளும் மறைமுகமான நடவடிக்கைகள், வஞ்சக போக்குகள் மற்றும் திட்டமிட்ட இடையூறுகள் இதன் நிரந்தர மேம்பாட்டுக்கும் சேவைக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அத்துடன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் சேவைகள் குறைக்கப்பட்டு, அதன் தரம் சிதைக்கப்படுவதற்கான பின்னணியில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மற்றும் சட்டவிரோத ஒழுங்குகள் செயல்படுவதாகவும், அவை உறுதியான தண்டனைவிதிகள் இன்றி தொடர்வதாகவும் எமது சங்கம் ஆழ்ந்த கவலையுடன் , உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.
தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் அதன் அனைத்து பிரிவுகளும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளடங்கலாக பாதுகாக்கப்பட்டு மேம்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நோயாளர்களுக்கான உயர்தர சிகிச்சைகள் அரச வைத்தியசாலையில் தொடர வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.