காதலானால் கடத்தப்பட்டு பதின்மவயது சிறுமி கூட்டுத் பாலியல் வன்புனர்வு; தமிழர் பகுதியில் சம்பவம்
காதலானால் வீட்டிலிருந்த சிறுமி கடத்திச் சென்று கூட்டுத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை , கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பால் மறுநாள் வியாழக்கிழமை (04) முறைப்பாடு செய்யப்பட்டது.

இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையே காதல்
நேற்று வெள்ளிக்கிழமை (05) கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பில் மீலும் தெரியவருகையில்,
கல்முனை மாநகரப் பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்கு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட 16 வயதுடைய சிறுமி தனது தாயாருடன் ஆடை கொள்வனவிற்காகச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியாற்றிய இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டு, தொலைபேசி எண்களும் பரிமாறப்பட்டு தொடர்பில் இருந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, கடந்த புதன்கிழமை இரவு 11:30 மணியளவில், இளைஞன் வாடகைக்கு எடுத்த வேன் ஒன்றில், தான் பணிபுரியும் கடையில் வேலை செய்யும் மற்றொரு 56 வயதுடைய நபரையும் அழைத்துக் கொண்டு சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த சிறுமியைத் தொலைபேசியில் அழைத்த இளைஞன், பலவந்தமாக வேனில் ஏற்றி அம்பாறை மாவட்டத்தின் மத்திய முகாம் பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளனர்.
அங்குள்ள பாழடைந்த வர்த்தகக் கட்டடம் ஒன்றிற்குச் சிறுமியைக் கொண்டு சென்று, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பின்னர் சிறுமியை அக்கரைப்பற்று பகுதியில் இறக்கிவிட்டு இருவரும் தப்பியோடியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் பின்னர், அப்பகுதியால் வந்த பேருந்து ஒன்றின் உதவியுடன் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்து முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு 25 வயதுடைய முதன்மைச் சந்தேகநபரைக் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள இரண்டு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய மற்றைய சந்தேகநபரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காகக் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் காரணமாக அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுமியின் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிந்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.