ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரா? நாடாளுமன்ற தேர்தலில் தமிழரின் பொது அணியா?
இந்திய நலன்களை முன்னிறுத்திச் செயல்படும் சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தம் மற்றும் ஏனைய இந்திய முகவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட 'எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்' என்ற கோரிக்கை இப்போது பல தளங்களிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 'தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதால் தமிழினத்துக்கு நன்மை விளையுமா?', 'இந்த அரசியல் சதுரங்கத்தில் தமிழர் தரப்பு தம்மை வலுப்படுத்துவதற்கு எவ்வாறு காய் நகர்த்த வேண்டும்?' என்று ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.
முதலில் கடந்த காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடும் போது என்ன நடந்தது என்பதை ஆராய்வோம்.
வரலாறு
இலங்கையின் அரசியலமைப்பு 1978 ஆம் ஆண்டு மாற்றப்பட்டு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 1982 ஆம் ஆண்டில் இடம்பெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் திரு குமார் பொன்னம்பலம் 'தமிழர் தேசம் ஒரு தனி தேசம்' என்ற கோரிக்கையை முன்வைத்துப் போட்டியிட்டார்.
அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரான திரு அமிர்தலிங்கத்திடம் இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினாவியபோது 'கூட்டணி இது போன்ற மலிவான உத்திகளை பயன்படுத்தாது' என்றும் அதே நேரம் 'ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும்' என்றும் கோரி இருந்தார்.
அப்போது இடதுசாரி தமிழ் கட்சிகளால் 'ஜேஆர் க்கு எதிரான தமிழ் வாக்குகளை திசை திருப்புவதற்காக திரு குமார் போட்டியிடுகிறார்' என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு இருந்தது. இறுதியாக குமார் 173,934 வாக்குகளை அதாவது மொத்த வாக்குகளில் (2.67%) வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்தில் 40.03% (87,263) வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்தார்.
இரண்டாவதாக, திரு சிவாஜிலிங்கம் டெலோ மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ராஜினாமா செய்த பின்னர், 2019 ம் ஆண்டு நடைபெற்ற 8வது ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 0.09 வீத (12256) வாக்குகளையே பெறமுடிந்தது.
மேற்படி இரண்டு தேர்தல் முடிவுகளையும் எடுத்து நோக்கினால் 1977 இனக்கலவரத்தின் பின்னர் தமிழர் மத்தியில் விடுதலை உணர்வுகள் உச்சத்தில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் - கூட்டணியின் பகிஷ்கரிப்புக் கோரிக்கைக்கு மத்தியிலும் - யாழ் மாவட்ட மக்கள் திரு குமாருக்கு வாக்களித்துத் தனித்தேசம் குறித்த தமது விருப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இருப்பினும் முக்கியமாக வடக்கு கிழக்கிற்கு வெளியே தமிழர்களின் ஆதரவை அவர் பெற முடியவில்லை.
ஆனால் 2019 இல் இடம்பெற்ற எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளராகத் தம்மை முன்னிறுத்தி திரு சிவாஜிலிங்கம் போட்டியிட்டபோது அவர் முற்றாக அனைத்துப் பிரதேசத் தமிழ் மக்களாலும் நிராகரிக்கப்பட்ட அதேவேளையில், ராஜபக்சர்களுக்கு எதிரான தமிழர்களின் வெறுப்பு அலையானது வடக்கு கிழக்கு மலையகம் எங்கும் திரு சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவாக வெளிப்பட்டு, அந்தப் பிரதேசங்களில் மாத்திரம் திரு சஜித் வெற்றி பெற்று இருந்தார்.
குறித்த காலகட்டத்தில் 'திண்ணைவேலியில் உள்ள பிரபல உல்லாச விடுதியில் ராஜபக்சர்களும் சிவாஜிலிங்கமும் இரகசியமாக சந்தித்த பின்னரே திரு சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்' எனச் சந்தேகங்கள் எழுந்திருந்தன.
அவற்றினை உறுதிப்படுத்துவது போல, ராஜபக்சர்களுக்கு ஆதரவான சிங்கள மொழி ஊடகங்கள் சிவாஜிலிங்கத்தின் தமிழ் இனவாத நேர்காணல்களை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டு சிங்கள வாக்காளர் மத்தியில் சிங்கள இனவாதத்தைத் தூண்டி ராஜபக்சர்களின் வெற்றியை உறுதி செய்து இருந்தன.
தமிழ்ப் பொது வேட்பாளர்
2019 இடம்பெற்ற எட்டாவது ஜனாதிபதித் தேர்தலிலேயே 'தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு எதையும் சாதிக்க முடியாது' என்பதைத் தமிழ் வாக்காளர்கள் உணர்ந்து விட்ட நிலையில், இப்போது தமிழர்களுக்குத் தனியான தேசத்தைப் பெறுவதற்குரிய சாத்தியங்கள் மேலும் அருகியுள்ள நிலையில், இந்திய முகவர்கள் ஏன் தமிழ்ப் பொது வேட்பாளர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்? என்பதை அறிந்துகொள்ளத் தொடர்ச்சியாக இலங்கையில் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் தந்திரங்கள் என்ன என்பதைத் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால் தமிழ் வாக்குகள் பிரிக்கப்படும்.
அப்போது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளுடன் பதவிக்கு வரும் நிலையில் கொழும்பில் உள்ள ஆட்சியாளர்களுக்கும் தமிழருக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்கும்.
அதாவது சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு இலங்கைக்குள் பின்கதவால் உள்நுழைவதே இந்திரா காந்தி காலத்தில் இருந்து இந்திய வல்லரசு, அந்த நாட்டின் உளவு அமைப்பு மற்றும் தற்போதைய மோடி அரசு வரையில் பிரதான தந்திரோபாயத் திட்டமாக இருக்கிறது.
இலங்கையில் தமிழ்த் தலைமைகள் ஒன்று படுவதை தடுத்து அவர்களை பலவீனமான பொம்மலாட்டப் பொம்மைகளாக வைத்திருப்பதன் மூலம் ஈழத்தமிழரின் தேசிய உணர்வுகளை மழுங்கடித்து இந்திய சார்பு நிலையைத் தோற்றுவிப்பது இரண்டாவது திட்டமாக இருக்கிறது.
இந்த உபாயத்தைப் பல ஈழப் போராளி இயக்கங்களை இந்தி(ரா)யா தனது மண்ணில் உருவாக்கிப் பயிற்சியளித்து மோதவிட்ட காலத்தில் இருந்து இன்றைய தமிழரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் இந்திய முகவர்களது தலையீடு வரை தொடர்ச்சியாக அவதானிக்கலாம்.
இலங்கையில் தமிழருக்கு 13 வது திருத்தத்துக்கு மேற்பட்ட ஒரு கௌரவமான தீர்வோ அல்லது நிலையான சமாதானமோ ஏற்படக் கூடாது என்பதே இந்தியப் பிராந்திய வல்லரசின் மூன்றாவது திட்டமாக இருக்கிறது.
இதன் காரணமாகவே 2009ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் 'சிறுபான்மையினருக்கு உரிமைகள் வழங்கவேண்டும்' என்று வலியுறுத்தி இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை மேலை நாடுகள் கொண்டு வந்த போது, இந்தியா தலையிட்டு அதனை இலங்கையில் தமிழ் மக்களைப் 'பயங்கரவாதிகளிடமிருந்து' விடுவித்தமைக்குப் பாராட்டும் தீர்மானமாக மாற்றியது.
இந்தியாவின் இந்தச் சூழ்ச்சியினால் வன்னியில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் இரண்டு வருடங்கள் தமிழர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்படும் நிலை உருவானது.
மேலே குறிப்பிட்ட உபாயங்களை இலங்கையில் மாத்திரமல்லாமல் இந்தியா தனது அண்டை நாடுகளான வங்கதேசம் (பங்களாதேஷ்), பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவுகள் அனைவற்றிலும் கடைபிடித்துப் பிராந்தியத்தில் தன்னை ஒரு வல்லரசாக நிலைநாட்ட முயல்வதைப் பிராந்தியமானது பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னரான காலப்பகுதியின் வரலாற்றை ஆராய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
எனவே தமிழ் மக்களும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நேர்மையாகப் போராடுபவர்களும் இந்தியாவின் இந்த நயவஞ்சக வலைக்குள் வீழ்ந்து விடாது, தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்கான எந்த ஒரு நகர்வினையும் முற்றாக நிராகரிக்க வேண்டும்.
எது சாத்தியம்?
இலங்கையில் தலைவிரித்தாடும் ஊழல் மற்றும் மோசடிகள் நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களையும் பாதித்துக் கொண்டிருக்கும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ள நிலையில், தமிழர்களே அதிகளவு வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள தருணத்தில், ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் ஈழத்தமிழர்கள் தமது வாக்குகளைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி இந்த அரசியல் சதுரங்கத்தில் பொது எதிரிகளை முதலில் தோற்கடிக்க வேண்டும்.
தென்னிலங்கையின் தற்போதைய அரசியல் கள நிலவரத்தின்படி, முதன்மைக் கட்சிகளும் முதன்மை வேட்பாளர்களும் சமபலத்துடன் காணப்படுகின்றனர்.
ஒரு தென்பகுதிக் கட்சியோ தலைவரோ அறுதிப் பெரும்பான்மையின வாக்குகளை மட்டும் பெற்று அடைய முடியாத சூழல். இம்முறை எவர் ஜனாதிபதியாக வருவார் என்பது சிறுபான்மையினர் கைகளிலேயே உள்ளது எனப் பெரும்பான்மையின மக்களே வெளிப்படையாகக் கூறும் நிலை.
இவ்வாறு தீர்மானிக்கும் சக்தியாகத் தமிழர்கள் மாறக்கூடிய தந்திரோபாயத் தருணத்தில், தென்பகுதியில் இளைஞர்களின் ஆதரவுடன் சுயமாக உறுதியாக முடிவு எடுக்கக்கூடிய தலைவராக முன்னிலை பெறும் ஒருவருக்கு வாக்களிப்பதன் ஊடாக ஒரு ஆட்சி மாற்றத்தை தமிழர்களால் ஏற்படுத்த முடியும்.
ராஜபக்சர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்ற நிலையில், இம்முறையும் ராஜபக்சர்களின் ஆதரவுடன் போட்டியிடும் தென்பகுதி ஜனாதிபதி வேட்பாளர் மறைமுகமாகத் தமிழ்ப் பொது வேட்பாளரை ஊக்குவித்துத் தென்பகுதியில் சிங்கள இனவாத வாக்குகளைப் பெறவே எத்தனிப்பார்.
அதேபோல, பிராந்திய வல்லாதிக்கமும் இலங்கையில் தமிழர்கள் தீர்மானகரமான சக்தியாக மேலெழுவதைத் தடுக்கத் தன்னாலான அனைத்தையும் செய்யும்.
தமிழர் பொது அணி
அடுத்ததாக பாராளுமன்றத் தேர்தலில், விகிதாசார முறைத் தேர்வு முறைமையின் கீழ் அதிக அளவு தமிழர்கள் பாராளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், அனைவரும் இணைந்து தமிழர்களின் பொது அணி ஒன்றை உருவாக்கி அந்த அணியின் கீழ் போட்டியிட வேண்டும்.
ஜேவிபியோ அல்லது சஜித் அணியினரோ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழர்களின் உரிமைகளைத் தாம்பாளத்தில் வைத்துத் தரப்போவதில்லை. மாறாக சிங்களத்தின் வாக்குகள் முக்கூறாகப் பிரியக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படும் களநிலவரத்தில், சரியான தந்திரோபாயத் திட்டமிடல் ஊடாக இலங்கையின் அடுத்த பாராளுமன்றில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் செல்வாக்கினை அதிகரிக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம் தற்போது கைகூடியுள்ளது.
சின்னாபின்னப்பட்டுச் சிதறி நிற்கும் ஒட்டுக்குழுக்களாகச் செயல்படாத தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஈழத்தமிழரின் நலன்களுக்காகத் தமது சுயநலன்களை தியாகம் செய்து ஒன்றுபட்டால் கூட்டாட்சித் தீர்வினை அல்லது குறைந்த பட்சம் 13 வது திருத்தத்தில் உள்ள காணி போலீஸ் அதிகாரங்களை வேண்டிப் பெற முடியும்.
மேலும் பொதுவான தமிழர் அணி ஒன்றை உருவாக்க ஆதரவளிக்காத அரசியல்வாதிகள், ஜனாதிபதித் தேர்தல் வரும்போது மட்டும் குதித்தெழுந்து பொது வேட்பாளர் பற்றி பேசும் போது, அவர்களுடைய வேடம் கலைந்து யாருடைய நலன்களுக்காக இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறார்கள் என்பது பரகசியமாகிறது.
மோடியின் அரசாங்கம் நாள்தோறும் இலங்கைக் கடலில் பல மில்லியன் பெறுமதியான மீன்களை இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக அள்ளிச்செல்ல ஊக்குவித்து வருவதோடு, சுரண்டலை மேலும் அதிகரிப்பதற்கு மண்டைதீவில் பல மில்லியன் பெறுமதியான கடல்வள ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க முன்வருகிறது.
மறுபுறம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைத்து இலங்கையின் வளங்களை உறிஞ்சி எடுப்பதற்கு கங்கணம் கட்டிச் செயல்படுகிறது.
மோடியின் நெருங்கிய சகாவும் வியாபாரியுமான அதானி மன்னார் உட்பட வடக்கின் பல பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளுக்கு அண்மையில் காற்றாலைகளை அமைத்து, இயற்கைச் சமநிலையினைக் குலைத்துத் தமிழர்களை அவர்களது வரலாற்று வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றி, அப்பகுதிகளில் நிறைவாக உள்ள இல்மனைட் உள்ளிட்ட கனிய வளங்களையும் சுரண்டுவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார்.
அதே தருணத்தில், இலங்கைத் துறைமுகங்களைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முயலும் இந்தியா இப்போது மத்தள விமான நிலையத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்ய வேண்டியது என்ன?
இவ்வாறாக இந்தியாவின் சூழ்ச்சிவலை இலங்கையை சுற்றி இறுகிக் கொண்டு வரும் களப்புறச் சூழ்நிலையில் ஈழத் தமிழர்கள் "மத்தியில் ஆட்சி மாற்றம், மாகாணங்களில் தமிழர் பொது அணி" என்ற திட்டத்துடன் காய்களை நகர்த்தித் தம்மை பலப்படுத்த வேண்டும்.
இந்தியாவின் கைக்கூலிகளாகப் பல தமிழ் அரசியல்வாதிகள் மாற்றப்பட்டு மௌனமாக்கப்பட்டும், பிரதான அரசியற் கட்சி உட்கட்சிப் பிளவினால் செயலிழக்க வைக்கப்பட்டும் உள்ள கையறு நிலையில் இன மீட்சிக்காகத் தமிழ் புத்திஜீவிகளும் தேசிய சிந்தனையாளர்களும் தமது கருத்துக்களை துணிவுடன் வெளிப்படுத்த முன்வர வேண்டும்.
போர்க்கால அழிவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்ட பெருமளவு தமிழர்கள் வன்னி, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையினால் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டவர்கள் மற்றும் இலங்கை நீதிமன்றத்தில் பொருளாதாரக் குற்றம் இழைத்தவர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் ஆகிய இரு தரப்பினர் மீதும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
முழுமையான ஒரு ஆட்சி மாற்றத்தின் மூலமே இந்தக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதே வேளை பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஒன்றுபட்ட குரலில் பிராந்திய சுயாட்சியைப் பெற ஈழத் தமிழர்கள் முயல வேண்டும் என குறித்த பதவியை முகநூலில் Dr முரளி வல்லிபுரநாதன் என்பவர் ஈட்டுள்ளார்.