எமது அரசை அங்கீகரிக்க தவறினால்.... அமெரிக்காவுக்கு தலிபான்கள் பகிரங்க எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்க தவறினால் உலகுக்கே பிரச்சினை ஏற்படும் என அமெரிக்காவுக்கு தலிபான்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை.
எனினும் சீனாவும் பாகிஸ்தானும் மட்டுமே தலிபான்களுடன் நல்லுறவை பேணி வரும் நிலையில், தலிபான்களுடன் முறையான உறவை ஏற்படுத்துமாறு உலக நாடுகளுக்கு இந்த 2 நாடுகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசை அங்கீகரிக்க தவறுவது பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் உலகுக்கும் பிரச்சினைகளை உருவாக்கி விடும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் (Zabihullah Mujahid) கூறுகையில்,
அமெரிக்காவுக்கு நாங்கள் சொல்லவரும் செய்தி என்னவென்றால், எங்கள் அரசை அங்கீகரிக்காமல் இருப்பது தொடர்ந்தால், ஆப்கானிஸ்தான் பிரச்சினை தொடரும் என்றும் அது பிராந்தியத்தின் பிரச்சினை என்றும் கூறினார்.
அதன் பின்னர், அது உலக பிரச்சினையாக கூட மாறும் என்றும் தலீபான்களும் அமெரிக்காவும் கடந்த முறை போருக்குச் சென்றதற்குக் காரணம் இருவருக்கும் முறையான தூதரக உறவுகள் இல்லாததே எனவும் கூறிய தலிபான் செய்தி தொடர்பாளர் போருக்கு காரணமான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம், அரசியல் சமரசத்தின் மூலமும் தீர்த்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை எங்கள் அரசுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஆப்கன் மக்களின் உரிமையாகும். போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு நிதியளிப்பதாக தெரிவித்துள்ள சீனா, அண்டை நாடான பாகிஸ்தான் வழியாக சீன சந்தைகளுக்கு ஆப்கானிஸ்தானின் ஏற்றுமதிகளை எடுத்து செல்லவும் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.