மட்டக்களப்பில் வாள்வெட்டு குழு ஆட்டூழியம்: இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசத்தினால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு இளைஞர்கள் வாள்வெட்டில் படுகாயமடைந்துள்ள நிலையில், கிராமத்து இளைஞர்கள் பலர் மறைவிடங்களில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
சந்திவெளி, பாலையடிதோணா கடற்கரையில் மதுபோதையில் இரண்டு குழுக்களிற்கிடையில் மோதல் ஏற்பட்டது.
சந்திவெளி பகுதியில் உருவாகி வரும் வாள்வெட்டு குழு ஒன்றும் இதில் தொடர்புபட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தலையில் பலத்த காயங்களுடன்மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
21, 22 வயதான இளைஞர்களே காயமடைந்தனர். காயமடைந்த இளைஞர்கள் தரப்பினர் தற்போது கிராமத்திற்குள் புகுந்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
ஒரு பகுதி இளைஞர்கள் கிராமத்திற்குள் தலைமறைவாகியுள்ளதாகவும், பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இரண்டு அரசியல் தரப்பை ஆதரிக்கும் குழுக்களே மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.