தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கலி வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ; ஏன் தெரியுமா!
தூய்மை பணியாளர் ஒருவரை நேரில் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்க சங்கிலி அன்பளிப்பாக கொடுத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில், தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருபவர் பத்மா (50). இவர் கடந்த ஜனவரி 11ஆம் திகதி தனது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது தி.நகர் வண்டிக்காரன் சாலையில் கிடந்த ஒரு பையை எடுத்துப் பார்த்துள்ளார்.

45 சவரன் தங்க நகைகள்
அதில் ஐஸ்கிரீம் டப்பாவிற்குள் ரூ.45 இலட்சம் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகள் இருந்தன. வறுமையில் வாடினாலும், நேர்மை தவறாத பத்மா, உடனடியாக தங்க நகைகள் இருந்த அந்த பிளாஸ்டிக் கவரை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் சோதனை செய்ததில், அதில் சுமார் ரூ.45 இலட்சம் மதிப்புள்ள 45 பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தங்க நகைகளை தொலைத்ததாக முன்பே புகார் அளித்தது கண்டறியப்பட்டது.

அவர் அளித்த ஆவணங்கள் சரிபார்த்த பின்னர், நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப்பணியாளர் பத்மாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகிறார்கள்.
தூய்மைப்பணியாளர் பத்மாவை நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பரிசுத் தொகையாக ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செவ்வாய்க்கிழமை (03) தூய்மைப்பணியாளர் பத்மாவை நேரில் வரவழைத்து பாராட்டியதோடு, அவருக்கு தங்கச் சங்கலியை பரிசாக வழங்கினார்.