சுமந்திரன், சாணக்கியன் தொடர்பில் எச்சரிக்கும் கஜேந்திரன்!
சுமந்திரன், சாணக்கியன் கூறும் பொய்களில் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்ல எனவும் அவர் கூறினார்.
அம்பாறை பாண்டிருப்பு பகுதியில் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தமிழர் பகுதியில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கம் சிங்கள மயமாக்கம் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் தமிழ் தேசத்தின் இருப்பினை நாங்கள் பாதுகாக்க முடியாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசத்தின் இறைமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்று ஒரு சுயாட்சி எட்டப்பட வேண்டும்.இவ்வாறு இல்லாமல் வெறுமனே வடக்கு கிழக்கினை இணைப்பதன் ஊடாக மாத்திரம் இந்த குடியேற்றங்களையோ அல்லது பௌத்த மயமாக்க விடயங்களையோ தடுத்து நிறுத்த முடியாது என்றும், ஏனெனில் அதிகாரம் முழுவதும் அரசாங்கத்தின் கைகளிளே உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதே வேளை வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தாலும் அங்கு ஆளுநருக்கு தான் அதிகாரம். அதே போன்று அந்த ஆளுநருக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்கள் ஆளுநரின் கட்டளை படி தான் நடப்பார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையில் கூட முதலமைச்சரின் செயலாளரையும் ஆளுநர் தான் நியமிப்பார். அங்கே சகல கட்டுப்பாடுகளும் ஆளுநரின் கீழ் தான் இருக்கும் என்பதனால் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கருத்துக்களை கூற முடியும்.
அதேவேளை ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஒரு போதும் சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இது 1987 1988 ஆண்டுகளில் இருந்து மாகாண சபை உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இந்த மாகாண சபை நடைமுறையில் தான் இருக்கின்றது. இச்சபை இணைந்தும் இருந்தது. குடியேற்றம் அந்த வேளையிலும் இடம்பெற்றிருந்தது.
அப்போது ஆயுதப்போராட்டத்தினால் குடியேற்றங்கள் தடுக்கப்பட்டு கொண்டிருந்ததே தவிர இந்த மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இது தான் உண்மையான விடயம் சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற ஒரு விடயம் எனவும் அவர் கூறினார். தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி வந்தமை வரலாறு.2015 ஆண்டு எமக்கு கடைசி சந்தர்ப்பம் ஒன்றினை தாருங்கள் என்று கூறினார்கள்.
அதாவது வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் ஒரு சமஸ்டி தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவோம் என்றெல்லாம் கூறினார்கள்.அதே போன்று 2016 ஆண்டு இறுதிக்குள் யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கூறினார்கள்.
மக்களை அதனை நம்பி பெருவாரியாக வாக்குகளை இவர்களுக்கு வழங்கி இருந்தார்கள். ஆனால் வென்ற மறு வாரமே சுமந்திரன் எம்.பி சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என கூறினார். ஜெனிவாக்கு சென்று உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தார்கள்.
இப்படி இவர்களது ஏமாற்றுக்களை தேர்தலை மையப்படுத்தி செய்கின்றார்கள். இவர்களது இவ்வாறான நாடகங்களை மக்களும் அறிவார்கள்.
எனவே முழுக்க முழுக்க ஏமாற்றும் விடயங்களே அவர்களிடம் உள்ளன என்பதனை மக்கள் புரிந்துகொண்டு, அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.