திடீரென முடக்கிய பிரித்தானிய நாடாளுமன்றம்: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
பிரித்தானியாவில் நாடாளுமன்றத்தில் வளாகத்திற்குள் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் ஊடுருவ முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்தேக நபரை மடக்கிப்பிடித்து பொலிஸார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் தாற்காலிமாக முடக்கப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு முன்னால் உள்ள நுழைவாயில் ஒன்றில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில், Keith Palmer எனும் பொலிஸ் அதிகாரி கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
இன்று, டிசம்பர் 1 திகதி புதன்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில், அதே நுழைவாயிலின் வழியாக குறித்த சந்தேகநபர் நுழைய முயன்றுள்ளார்.
இதன்போது துப்பாக்கி ஏந்திய பொலிஸார் குறித்த சந்தேகநபரை உடனடியாக சுற்றிவளைத்து நிறுத்தினர். பின்னர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பிற்பகல் 3.30 மணியளவில் சந்தேக நபரை மெட் பொலிஸ் வேனில் ஏற்றி நாடாளுமன்றத் தோட்டத்திலிருந்து அழைத்துச் சென்றனர். சந்தேக நபர் ஒரு கம்பளி தொப்பி, ஜீன்ஸ், கருப்பு நிற கோட் மற்றும் ட்ரெய்னர்ஸ் ஷூ அணிந்திருந்தார்.
பின்னர் சிசிரிவி கமராவில் பதிவான காணொளியில், சந்தேக நபர் ஒரு சைக்கிளில் அவ்வழியே சுற்றித்திரிந்ததும், பின்னர் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழையமுற்பட்டதும் தெரியவந்தது.
மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய காவலர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.