சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா வின் திடீர் மரணம் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு
சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் மறைவு குறித்து செல்வம் அடைக்கலநாதன் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
சிறையில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காகவும்,அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நீண்ட காலமாக செயல்பட்டு வந்திருந்தவர் சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா ஆவார்.
இவரின் இழப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நம்பி இருந்தவர்களுக்கு பாரிய இழப்பாகவே அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்கடத்தல்,காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் அரசியல் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக உயர்நீதிமன்றத்தில் வாதாட்டங்களை முன் வைத்து, உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் பேசப்பட்ட ஒரு பிரபல சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா ஆவர்.
அத்துடன் என்னை அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்த போது எனது விடுதலைக்காக நீதிமன்றத்தில் வாதாடி என்னை பிணையில் செல்ல அனுமதி பெற்றுத் தந்தவர் அவரே என்றும் அவரின் இழப்பை ஈடு செய்ய முடியாத நிலையில் நாம் உள்ளோம் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரை இழந்து நிற்கும் கணவர் கே.வி.தவராசா மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.