தரமற்ற மருந்துப் பாவணை; கேள்விகுறியாகும் பாதிக்கப்பட்டோரின் நிலை
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடாத்தப்பட்ட 37 கண் சத்திரசிகிச்சைகளில் 17 பேர் பகுதியளவிலும் இருவர் பூரண பார்வையை இழந்துள்ளதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (31.08.2023) வைத்தியசாலையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் கனிஷ்க மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார். சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வந்தாலும் உண்மை நிலவரத்தை இங்கு வெளிப்படுத்த வேண்டும், கண்களுக்கு செலுத்தப்பட்ட மருந்துகள் வைத்தியர்களால் தவறாகியதாக நினைக்கின்றனர், இதற்கான பொறுப்பை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அரசின் நலனுக்காக தரம் குறைந்த மருந்துகள் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அவசர கொள்வனவு விலையில் பல வகையான மருந்துகள் கொண்டு வரப்படுவதாகவும் பெரும்பாலானவை தரமற்றவை என்றும் குறிப்பிட்டார்.
அவற்றில் ப்ரெட்னிசோலோன் கண் மருந்தும் ஒன்று, இனிமேல் இதுபோன்ற தரம் குறைந்த மருந்துகளை கொண்டு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகமான வைத்தியர்கள் வெளிநாடு நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.
சத்திர சிகிச்சைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எவ்வித இழப்பீடும் வழங்கவில்லை.
நிவாரணம் வழங்கினாலும் எவ்வளவு நாட்களுக்கு அவை போதுமானதாகவிருக்கும் என கேள்வியெழுப்பியுள்ளார்.