ஆன்லைன் வகுப்பு நேரம் போக உடல்களை கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் ஓட்டும் கல்லூரி மாணவி!
இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த முதலாமாண்டு கல்லூரி மாணவி பிரியா பாட்டீல் ஆன்லைன் வகுப்பு நேரம் போக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை மின் மயானத்திற்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் பணியை தொண்டு உள்ளத்தோடு செய்து வருகிறார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த பிரியா பாட்டீல் கோல்ஹாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் அறிவியல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்பொழுது கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகளே நடக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள் போக மற்ற நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த வர்களின் உடல்களை மின் மாயனத்துக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டு வருகிறார். பிரியா தன்னார்வத்தோடு இந்தப் பணியை செய்து வருகிறார்.
ஆன்லைன் வகுப்புகள் இல்லாத நாள்களில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரைக்கும் இந்தப் பணியை செய்து வருகிறார். பிரியாவுக்கு அவரது குடும்பத்தினர் உறுதுணையாக இருக்கின்றனர். அவரது தந்தை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
தாய் இன்சுரன்ஸ் ஏஜெண்டாக உள்ளார். கோல்ஹாப்பூர் பகுதியில் மாநில அரசால் நிர்வகிக்கப்படும் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நோயாளிகளின் உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் இவரே கொண்டு செல்கிறார். மருத்துவமனையில் இருந்து உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற ஊழியர்களுக்கு உதவி செய்கிறார்.
அதேபோல் மயானத்திலும் அங்குள்ள பணியாளர்களுக்கும் பிரியா உதவி செய்கிறார். இது குறித்து பேசிய ப்ரியா பாட்டீல் கூறுகையில்,
“ நான் கடந்த 15 நாள்களாக இந்தப் பணியை செய்து வருகிறேன். இதுவரை மருத்துவமனையில் இருந்து 65 உடல்களை மயானத்துக்கு கொண்டு சென்றிருப்பேன். எனக்கு கார் ஓட்டத் தெரியும் என்பதால் என்னுடைய ஆன்லைன் வகுப்பு நேரம் போக இந்த சமூகத்துக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். சமூக செயற்பாட்டாளர் ஹர்ஷன் சர்வே, பிரசாந்த கோகலே ஆகியோர் சி.பி.ஆர். மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை இலவசமாக கொடுத்து உதவினர். நானும் இலவசமாக இச்சேவையை செய்து வருகிறேன்.
முதன்முதலில் பிபி கிட் அணிந்து ஆம்புலன்ஸ் ஓட்டுவது கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தது. நான் என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். இப்போது அது பழக்கமாகிவிட்டது. மருத்துவமனை ஊழியர்கள், மாயனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள். இது எனக்கு உத்வேகத்தை அளிக்கிறதாக கூறுகின்றார்.