வவுனியா பல்கலையில் உயிரிழந்த மாணவன் ; கொழும்புக்கு அனுப்பப்படும் உடற்கூற்று மாதிரிகள்
வவுனியா பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக இன்று (3) கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழத்தில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பகிடிவதை
ஏனைய மாணவர்களுடன் மதுபானம் அருந்தியதன் பின்னர் அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
எனினும் அவர் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதை காரணமாகவே உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து இருந்ததுடன், மாணவரின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றிருந்தது.
எவ்வாறாயினும் அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.