தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை!
இந்தியா தமிழக அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் 2 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளுக்கு இரு நாடுகளும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.
தவறான தகவல்களை வழங்கும் உறவினர்கள்
எனினும் இந்த நடவடிக்கைக்கு சில சட்ட விதிமுறைகள் தேவை என்று குறிப்பிட்ட ஆளுநர், அவற்றை உருவாக்குவதற்கு சிறிது காலம் ஆகும் என்றும் தெரிவித்தார்.
தற்போது இந்திய அகதிகள் முகாம்களில் உள்ளவர்களில் சிலர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், அவர்கள் குறித்து எடுக்கப்படும் முடிவு மிகவும் முக்கியமானது என்றும் ஆளுநர் கூறினார். அதேசமயம் யாரையும் கட்டாயப்படுத்தி மீண்டும் அழைத்து வர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மீண்டும் வரும் அகதிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் நன்மைகள் குறித்து தெளிவான அறிக்கை இருக்க வேண்டும் என்றும், தற்போது இந்தியாவில் உள்ள பலருக்கு வடக்கு மாகாணத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் தவறான தகவல்களை வழங்கியுள்ளனர் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வசதிகள் குறித்து வடக்குப் பகுதி மக்கள் இந்தியாவில் உள்ள அகதிகளுக்கு தவறான தகவல்களை வழங்குவதால், அவர்கள் மீண்டும் வர விருப்பம் தெரிவிக்காதது ஒரு பெரிய பிரச்சனை என்றும் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.