30,000 இளைஞர் , யுவதிகளுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு; ஜனாதிபதி அநுரகுமார
இலங்கை அரசாங்க சேவையில் 30ஆயிரம் இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புத்தள நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
விண்ணப்பியுங்கள், நாங்கள் வேலை வாங்கித் தருகிறோம்
அரச வேலைகளுக்கு இப்போது நிறைய செய்தித்தாள்களில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பியுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறோம். நாங்கள் 30,000 புதிய, திறமையான இளைஞர்களை வேலைக்கு அமர்த்துகிறோம்.
அரச சேவையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது, ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவு உயர்த்தப்பட்டுள்ளது. அஸ்வெசும கொடுப்பனவு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவை எதுவுமே கிடைக்காமல் 8 இலட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொதியை சதொச ஊடாக 2500 ரூபாவுக்கு வழங்குகிறோம். மேலும் அஸ்வெசும பெறாத ஒரு குழு உள்ளது.
அவர்களுக்கு தகுதி இருந்தும் அவை கிடைப்பதில்லை. நாங்கள் விண்ணப்பங்களை கோரியுள்ளோம்.
இப்போது, ஜூன் மாதத்தில் தேர்வு செய்யும் சபை ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட 400,000 குடும்பங்களுக்கு புதிதாக அஸ்வெசும கொடுப்பனவை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.