10 அடி உயரத்திற்கு பாய்ந்துவந்த வெள்ளம்; மாணவியின் துணிச்சலான செயல்!
பாதுக்கை - வகை இரிதாபொல பிரதேசத்தில் பெரும் வெள்ளத்தில் நீந்தி இரண்டு உயிர்களை காப்பாற்றிய பாடசாலை மாணவி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
10 அடி உயரத்திற்கு பாய்ந்துவந்த வெள்ளத்தில் தத்தளித்த தம்பதியை குறித்த மாணவி துணிந்து வெள்லத்தில் சென்று காப்பாற்றியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடும் மழையால் பெரு வெள்ளம்
17 வயதான சரித்மா ஜினேந்திரி மாஇட்டிபே என்ற மாணவியான அவர், பாதுக்கை சிறி பியரதன வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார். கடந்த சிலநாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடும் மழையால் பெரு வெள்ளம் ஏற்பாடிருந்தது.
இரிதாபொல பிரதேசத்திற்கு அருகில் பாய்ந்து செல்லும் வாக் ஓயாவின் நீர் மட்டம் திடீரென அதிகரித்து வௌ்ளமாக மாறியது. நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளத்தால், பலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எல்லாவற்றையும் விட்டுவிட்டு உயரமான இடங்களுக்கு ஓடிச் சென்றனர்.
குறுகிய நேரத்தில் சுமார் 10 அடி உயரத்திற்கு வெள்ளம் உருவானதே இதற்குக் காரணமாகும். சரித்மாவின் பாட்டியும் தாத்தாவும் வீட்டின் பின்புறமுள்ள மலைக்கு ஓடிச் சென்று தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்ட நிலையில் , வீட்டின் ஜன்னல் வழியாக சரித்மா வௌியேற முற்பட்ட போது, தம்மை காப்பாற்றுமாறு அலறல் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக செயல்பட்ட சரித்மா, அருகில் இருந்த கட்டிடத்திற்கு சென்று பிளாஸ்டிக் கயிற்றை கொண்டு வந்து நீந்தி அவர்களை நோக்கி சென்று கதறி அழுத கணவன்-மனைவியை கயிற்றின் உதவியுடன் மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சரித்மா ஜினேந்திரிவின் பெற்றோர் இருவரும் வேலை நிமித்தமாக கொழும்பில் தங்கியுள்ளதால் அவரும் அவரது சகோதரரும் பாட்டி மற்றும் தாத்தாவுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய மாணவியின் துணிச்சலான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.