இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணத்தின் அளவு அதிகரிப்பு!
பல்வேறு புதிய சீர்திருத்தங்களுடன் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் வலுவான வேலைத்திட்டத்தின் காரணமாக, கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் பணவீக்கம் 62.1% சதவீதத்தினால் குறைந்துள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இலங்கையில் 2022 ஆம் ஆண்டின் முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் 66.7% ஆக இருந்த பணவீக்கம், 2023 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 4.6% வரை, குறைக்க முடிந்துள்ளதாக பதில் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய, 1.8 பில்லியன் டொலர்களாக இருந்த நாட்டின் அந்நியச்செலாவணிக் கையிருப்பை, கடந்த ஓராண்டில், 3.8 பில்லியன் டொலர்களாக உயர்த்த அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது.
டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், 361 ரூபாவாக இருந்தது. ஆனால் இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் டொலரொன்றின் கொள்வனவு விலை 321 ரூபாய் ஆகும்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை 2022 இல் 496,430 ஆகவும் இவ்வாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 904,318 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையின் சுற்றுலா வருமானம் 2022 ஆம் ஆண்டில் 832.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததுடன், இவ்வாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 1,304.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது, 56.7% வளர்ச்சியைக் காட்டுகிறது. மேலும், கடந்த வருடம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணத்தின் அளவு 2,214.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அது இந்த வருடம் 3862.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மாறியுள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 74.4% அதிகரிப்பு என நிதி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையால், (23.08.2023) ஆம் திகதி 1467 வகையான இறக்குமதிப் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டன.
தற்போது 279 பொருட்களுக்கு மாத்திரமே தடை அமுலில் உள்ளது. வாகனங்களின் இறக்குமதி 2020 ஆம் ஆண்டில், நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது பொதுப் போக்குவரத்துக்குத் தேவையான பேருந்துகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவுபடுத்தப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் நாம் இப்போது முதல் தவணையைப் பெற்றுள்ளோம். இவ்வாறு முழுமையாக, இந்த நாட்டின் பொருளாதாரத்தை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.” என்று பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.