இலங்கை பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு!
கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை இலங்கை பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை இணை பேராசிரியராக பணிபுரிபவர் இலங்கையைச் சேர்ந்த உடாந்த அபேவர்த்தனே.
இவர் தனது குழுவினருடன் இணைந்து, கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார்.
ரெஸ்ஆப் என்ற செயலி
அதன் அடிப்படையில் 'ரெஸ்ஆப்' என்ற செயலியை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியானது, கொரோனாவை மட்டுமின்றி ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற சுவாச வியாதிகளையும் கண்டுபிடித்துவிடும்.
அத்துடன் இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், காய்ச்சல் போன்ற எளிய அறிகுறிகளைக்கொண்டே ஒருவருக்கு கொரோனா மாதிரியான வியாதி ஏற்பட்டிருக்கிறதா, அது எந்த அளவு தீவிரமாக உள்ளது என்று இந்த செயலி தெரிவித்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
92 சதவீதம் துல்லியமான முடிவு
அதேசமயம் இந்த செயலி 92 சதவீதம் துல்லியமாக முடிவுகளை வெளியிடுவதாகவும் இதை உருவாக்கியுள்ள நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், உலகின் மிகப்பெரிய மருத்துவ தொழில் நிறுவனமான பைசர், இந்த செயலியை ரூ.1,474 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல்வேறு கட்ட பரிசோதனைகள், மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதலுக்கு பிறகே இந்த செல்போன் செயலி வெளிப்பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.