இலங்கை அரசியல்வாதிகள் சுவிட்சர்லாந்துக்குப் பயணம்; தமிழ் அரசியவாதிகளும் அடக்கம்
இலங்கை – சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 14 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நட்புறவு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையில் புதிய அரசமைப்பு மாற்றம் நிகழவுள்ள நிலையில் இலங்கை அரசியல்வாதிகள் சுவிஸ் அரசமைப்பு பற்றிய ஆழமான நேரடி நுண்ணறிவுகளைப் பெறவும், அர்த்தமுள்ள பரிமாற்றங்களில் ஈடுபடவும் ஒரு வாய்ப்பு இதன்போது வழங்கப்படும் என்று சுவிட்சர்லாந்து தூதரகம் விடுத்துள்ள அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
இலங்கையைச் சேர்ந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மேலும் சில அரசியல்வாதிகள் இந்த மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளனர்.
அதேவேளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரான பேராசிரியர் கபிலனும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.