இலங்கைப் பொலிஸாரை வறுத்தெடுத்த மனித உரிமைகள் ஆணைக்குழு !
நாட்டில் சட்ட ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காக, இலங்கை பொலிஸார் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு பொலிஸ்மா அதிபர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
கடந்த வார இறுதியில் பாணந்துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கட்டுப்படுத்தியமைக்கான காரணங்களை நியாயப்படுத்துமாறும் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை தள்ளிய சம்பவம்
களுத்துறை தலைமை பொலிஸ் பரிசோதகர், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை தள்ளிவிட்ட சம்பவம் குறித்தும் , அமைதிப் பேரணியை சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தி பங்கேற்றவர்களை கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
களுத்துறையில் இருந்து புறப்பட்ட அமைதிப் பேரணி பாணந்துறையில் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டதை, இன்று தமது ஆணைக்குழுவில் பாணந்துறை பொலிஸ் தலைமைப் பரிசோதகர் ஒப்புக்கொண்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்குமூலம் அளிக்க உத்தரவு
இந்தநிலையில் பேரணியை கட்டுப்படுத்தியதற்கான காரணம் என்ன? யாருடைய கட்டளை அல்லது உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ன? என்பவை குறித்து வாக்குமூலம் அளிக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை , பாணந்துறை பொலிஸ் பிரிவிற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேவையான கட்டளைகளை வழங்கி பேரணியில் பங்குபற்றியவர்களை பாதுகாக்க தவறியுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, அண்மைக்காலங்களில் பொலிஸாரின் பொருத்தமற்ற நடத்தைகள் மக்கள் மத்தியில் பொலிஸாரின் மேலுள்ள நம்பிக்கையை அழித்துள்ளது.
மேலும் இலங்கைப்பொலிஸார் சர்வதேச ரீதியில் நாட்டின் நன்மதிப்பையும் விரைவாக அழித்து வருவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.