பாரியளவில் கடனில் தவிக்கும் இலங்கை மக்கள்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் 22 வீதமான வீட்டு அலகுகள் கடனில் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்த குடும்ப அலகு கணக்கெடுப்பின் 2023 அறிக்கையின்படி வெளியாகியுள்ளது.
03 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 54.9 வீதமானவர்கள் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 93.5 வீதமானவர்கள் பாதிப்பைக் குறைப்பதற்கான உத்திகளைக் கையாண்டுள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14.2 சதவீதம் பேர் மார்ச் 2022 முதல் வேலை இழந்துள்ளனர்.
மேலும் ஆண்களின் சதவீதம் பெண்களை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில், இலங்கையின் மொத்த வீட்டு அலகுகளில் 91 வீதமான சராசரி மாதாந்தச் செலவு அதிகரித்துள்ளதுடன், மொத்த சனத்தொகையில் 7 வீதமானவர்கள் தமது சுகாதார சிகிச்சை முறையை மாற்றியமைத்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சையை மாற்றுவதற்கான காரணங்கள் குறித்து, பெரும்பான்மையான 81.7 சதவீதம் பேர் தங்களிடம் போதுமான பணம் இல்லை என்று கூறியுள்ளனர்.