கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இலங்கையர் அதிரடியாக கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வர்த்தகர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 5 கோடியே 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்தி வந்து அதனை வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோதே வர்த்தகர் கைதாகியுள்ளார்.

குஷ் ரக போதைப்பொருள்
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் மூதூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, அதனை இந்தியாவின் பெங்களூரு நகருக்குச் கொண்டுச் சென்றுள்ளார். பின்னர் பெங்களூரிலிருந்து இன்று அதிகாலை அவர் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சந்தேக நபரின் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.