இந்தியா - பாகிஸ்தான் மோதலில் இலங்கை தலையிடாது
இந்திய-பாகிஸ்தான் நெருக்கடியை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்திய, பாகிஸ்தான் மோதலில் இலங்கை தலையிடாது என தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (08) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
புவிசார் அரசியல் மோதல்
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் மோதல்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தலையிட மாட்டோம் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்திய-பாகிஸ்தான் நெருக்கடி தொடர்பாக நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதேவேளையில், அணிசேரா அணுகுமுறை பின்பற்றப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இருப்பினும், பயங்கரவாதம் எந்த வகையிலும் மன்னிக்கப்படவோ அல்லது ஆதரிக்கப்படவோ கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
எந்தவொரு நாட்டிற்கும் எதிராக செயல்பட இலங்கையின் பிரதேசத்தையோ அல்லது நீர்நிலைகளையோ ஒருபோதும் வழங்க மாட்டோம் என்ற கொள்கையை அரசாங்கம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.