இலங்கை இனப்படுகொலைக்கு நீதிவேண்டும்! பிரித்தானியாவில் அண்ணாமலை கோரிக்கை
இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் கு. அண்ணாமலை பிரித்தானியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இவ் விஜயத்தின் போது கடந்த 23-06-2023 அன்று இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் உலகத் தமிழர் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற 2009 இனப்படுகொலைக்கு சரியான தீர்வை பெற்றுத்தர கோரியும், இலங்கை வாழ் தமிழ் சமூகத்தினர் படும் இடர்களுக்கான இணக்கப்பாடு, தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விவகாரம், மலையக தமிழர்களின் உரிமை பலப்படுத்தல், இலங்கை இந்தியா வாழ் அகதிகளின் ஆதரவு என பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்ந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நிகழ்வில் ஈழத் தமிழர்கள், மலையக தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கை இந்தியா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு இடையிலான வலுவான பிணைப்பை எடுத்துக்காட்டி, நமது பகிரப்பட்ட மொழி மற்றும் கலாச்சாரத்தை எடுத்துக்கப்ட்டும் நிகழ்வாக இது அமையப்பெற்றிருந்ததாக உலகத் தமிழர் சிவில் சமூக அமைப்பு தெரிவித்திருந்தது.
இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் கவலைகள் மற்றும் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய க. அண்ணாமலையுடனும் மற்றும் கட்சியின் தலைமையுடனும் தொடர்ச்சியான உரையாடலை உருவாக்க உலகத் தமிழர் சிவில் சமூகம் வேண்டிநிற்கின்றது என உலகத் தமிழர் சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அண்ணாமலையின் ஆதரவிற்கு தங்கள் நன்றியைத் தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் அவரது தொடர்ச்சியான ஆதரவை உலகத் தமிழர் சிவில் சமூக அமைப்பு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.