இலங்கையில் இதன் தாக்கம் பாரியளவில் அதிகரிப்பு! எச்சரிக்கை தகவல்
நாட்டில் தற்போது டெல்டா தொற்று பரவும் வீதம் முழுமையாகக் குறைவடைந்துள்ள நிலையில் ஓமிக்ரோன் திரிபு பரவலில் தாக்கம் பாரியளவில் அதிகரித்துள்ளது. நாட்டில் பிரதான வைரஸாக ஓமிக்ரோன் மாற்றமடையக் கூடும்.
மேலும் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புககளை தவிர்த்துக் கொள்வதற்கான ஒரேயொரு வழி, மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதேயாகும் என வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்யவில்லை என்றால் கொரோனா மாத்திரமின்றி ஏனைய நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வைத்தியசாலை கட்டமைப்புக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை (31-01-2022) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தடுப்பூசியையும் மீறி கொரோனா தொற்று பரவக் கூடிய சூழலே தற்போது காணப்படுகிறது. எனினும், கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டு இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளில் பெருமளவானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
மேலும், உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு 12 செக்கன்களுக்கும் ஒரு கொரோனா உயிரிழப்புகள் பதிவாகிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், மீண்டும் மீண்டும் புதிய பிறழ்வுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதே இதில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஒரேயொரு வழியாகும். அதற்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாததாகும்.
இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளானாலும் தீவிர நிலைமையை அடைவதையும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதையும் குறைத்துக் கொள்ள முடியும். மாறாக வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் கோவிட் நோயாளர்கள் மாத்திரமின்றி ஏனைய நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, வைத்தியசாலை கட்டமைப்புக்கள் நெருக்கடிக்கு உள்ளாகும். எனவே தான் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுமாயின் 7 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் அன்றாட நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுத்துச் செல்ல முடியும். ஏழு நாட்கள் நிறைவடைந்ததன் பின்னர் கோவிட் பரிசோதனை செய்து கொள்வது அவசியமற்றது.
தற்போது டெல்டா வைரஸ் காணப்பட்டாலும், அதனை விட அதிகமாக ஒமிக்ரோன் வைரஸே காணப்படுகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமையை விட மாறுபட்ட நிலைமையே தற்போது நாட்டில் காணப்படுகிறது. டெல்டா பரவும் வீதம் முழுமையாகக் குறைவடைந்து, ஒமிக்ரான் பரவல் பாரியளவில் அதிகரித்து நாட்டில் பிரதான வைரஸாக அது மாற்றமடையக் கூடும்.
தற்போது எழுமாறாகவே சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. எத்தனை சதவீதம் என்பதைத் தாண்டி பெரும்பாலான பிரதேசங்களிலிருந்து பெறப்படும் மாதிரிகளில் ஒமிக்ரோன் தொற்று காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.