நாட்டில் வைரஸ் நோய்களின் பரவல் ; சிறுவர்கள் பாதிப்பு
நாட்டில் நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே குறிப்பிடுகையில், சிறுவர்கள் மத்தியில் இந்த நோய்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

நோய் அறிகுறிகள்
இந்நாட்களில் நிலவும் குளிர் மற்றும் வறண்ட வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கலாம். எமது சுவாசத் தொகுதியின் மேற்பகுதியையே இந்த வைரஸ்கள் பெரும்பாலும் பாதிக்கின்றன.
பொதுவாக இந்த வைரஸ் நோய்கள் முன்பள்ளி வயதுடைய சிறுவர்கள் மத்தியில் அதிகமாகப் பரவக்கூடும். காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை வலி, கடும் தலைவலி, தசை வலி மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய் அறிகுறிகள் இதில் ஏற்படக்கூடும்.
உங்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் இந்த நோய் அறிகுறிகள் காணப்பட்டால், அதேபோல் உங்களுக்குச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் நீங்கள் மிக விரைவில் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
அதேசமயம் , இந்நாட்களில் காற்றின் தரம் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும் எதிர்வரும் இரண்டு நாட்களில் இந்நிலைமை நீங்கிவிடும் என்றும் சுற்றாடல் அதிகார சபை ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்தார்.