கொழும்பில் இன்று இரவு முதல் அமுலாகும் விசேட போக்குவரத்துத் திட்டம்
கொழும்பு, கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்த குமாரசுவாமி மாவத்தையின் கிறீன் பாத் (Green Path) வளாகத்தில் இன்று (06) இரவு முதல் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த வளாகத்தில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று (06) இரவு 10.00 மணி முதல் பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி அதிகாலை 04.00 மணி வரை இந்த போக்குவரத்துத் திட்டம் நடைமுறையில் இருக்கும்.

இதன்படி, ஆனந்த குமாரசுவாமி மாவத்தையின் பொது நூலக சுற்றுவட்டத்திலிருந்து ஹோர்டன் சுற்றுவட்டம் வரை (விகாரமகாதேவி பூங்காவிற்கு இணையாக உள்ள வீதி), ஒரு வழியில் மாத்திரம் கொழும்புக்குள் நுழைவதற்கும் கொழும்பிலிருந்து வெளியேறுவதற்கும் ஏதுவாக போக்குவரத்து கூம்புகளை இட்டு வீதி ஒதுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.