புலமைப்பரிசில் பரீட்சையை இடையூறு இன்றி நடத்த விசேட வேலைத்திட்டங்கள்
எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்களத்தில் இன்று (13) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் இதனைத் தெரிவித்திருந்தார்.
புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் பிள்ளைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
பரீட்சை நேரத்தில் ஒலிபெருக்கிகளை வைத்து பிள்ளைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் துரித இலக்கமான 117 அல்லது 0113 668020, 0113 668100 மற்றும் 076 3 117 117 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாளை மறுதினம் 2,849 நிலையங்களில் ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.