தமிழர் பகுதியில் தென்னிந்திய திரை பிரபலம்; இலங்கையர்களுக்கு அழைப்பு!
இந்திய திரைப்பட நடன இயக்குனரும், மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சி தொகுப்பாளருமான கலா மாஸ்ரர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் இலங்கை கலைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது.
அவர்களையும் இந்திய திரைப்படத் துறைக்குள் உள்வாங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். வவுனியாவிற்கு வருகை தந்த அவர் வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனை கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், நீண்ட காலத்திற்கு பின்னர் நான் சிறிலங்கா வந்துள்ளேன். நான் பல தடவை படப்பிடிப்புக்காக கொழும்பு வந்திருக்கின்றேன் .
ஆனால் முதல் தடவையாக நான் வவுனியா வந்துள்ளேன். என்னுடைய அதிக ரசிகர்கள் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் தான் எனவும் அவர் கூறினார். இலங்கையில் இராமர், இராவணன் இருந்த இடங்கள் உள்ளதாக தெரிவித்த கலா மாஸ்டர், இலங்கை தமிழர்களுக்களிடம் நல்ல திறமை உள்ளது.
லொஸ்லியா எல்லாம் இலங்கையில் இருந்து வந்து இந்தியாவில் பிரபல்யமாக உள்ளார் என்றும் கூறினார். இலங்கை கலைஞர்களையும் இந்திய திரைப்பட துறைக்குள் உள்வாங்க வேண்டும் எனவும் அதற்கான முயற்சிகளை தான் மேற்கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தம் காரணமாக இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டமை கேட்டு நான் வேதனையடைந்து இருக்கின்றேன். நேரில் பார்க்கும் போது சில இடங்களில் நான் கண்ணீர் விட்டு அழுது கூட இருக்கின்றேன்.
இந்த உலகத்தில் எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. யாரும் யாருக்கு அடிமை கிடையாது. கனடா, லண்டன் என பல நாடுகளில் தமிழர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்.
அந்த நாடுகள் அதற்கு உரிமை கொடுத்துள்ளது. அப்படியிருக்கும் போது ஏன் இங்கு அப்படி கொடுக்க முடியாது? நான் எப்போதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நான் கொழும்பு போகின்றேன், வவுனியா போகின்றேன் என்று சொன்ன போது எல்லோரும் அங்கு போறியா? பயமில்லையா என்றார்கள். ஆனால் எந்த பயமும் கிடையாது.
இங்கு நானும் கணவனும் மட்டுமே தனியாக வந்துள்ளோம். எல்லா இடத்தையும் பார்க்கின்றோம். இது இராமர், முருகன், இராவணன் வாழ்ந்த இடம். இங்கு பயமில்லாமல் வரலாம் எனவும் அவர் தெரிவித்தார் .