கொரோனா ஊரடங்கில் 1,400 கி.மீ சென்று மீட்ட மகன் இன்று உக்ரைனில் தவிப்பு ... தாயார் விடுத்த கோரிக்கை!
கடந்த 2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ரஸியா பேகமும் ஒருவர். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ரஸியா பேகம். கணவரை இழந்த இவர் தன் இரண்டு மகன்களுடன் தெலங்கானா மாநிலத்தில் வசித்துவருகிறார்.
கடந்த 2020-ல் கொரோனா ஊரடங்கின்போது அண்டை மாநிலமான ஆந்திராவின் நெல்லூரில் சிக்கித் தவித்த தன் மகனை மீட்க, 1,400 கிலோமீட்டர் ஒற்றைப் பெண்ணாக மூன்று நாள்கள் பயணித்து, தன் மகனை அழைத்து வந்ததனால் அவர் அப்போது அதிகம் பேசப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது அவரின் 19 வயது மகன் உக்ரைனில் சிக்கியிருக்கிறார். கிழக்கு ஐரோப்பிய தேசத்தின் ரஷ்ய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது சுமி.
அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படித்துவருகிறார் ரஸியா பேகத்தின் மகன் நிஜாமுதீன் அமான். நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் தீவிரமடைந்துவரும் சூழலில், தன் மகனும் மற்ற இந்திய மாணவர்களும் பத்திரமாக நாடு திரும்பி வர வேண்டும் என ரஸியா பேகம் பிரார்த்தனை செய்வதாகக் கூறுகிறார் .
இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,
``சுமியில் மருத்துவம் பயிலும் என் மகனும், பிற இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும். இந்திய அரசு அதற்குரிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். என் மகன் நிஜாமுதீன் அமானும் இன்னும் சில மாணவர்களும் பதுங்கு குழிகளில் தங்கியிருக்கிறார்கள்.
என் மகன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னிடம் பேசினார்.
அப்போது தான் நலமாக இருப்பதாகவும், அவரைப் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
ஆனாலும், பதற்றமாக இருக்கிறது. என் மகன் உட்பட இந்திய மாணவர்களை மீட்டுத்தர வேண்டும்" என அந்த தாயார் கோரிக்கை வைத்துள்ளார்